திருச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என்றழைக்கும் மீனவர்கள் ஏன் தெரியுமா?
மீனவர் குலத்தில் பிறந்த இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், இன்றைக்கும் மீனவர்கள் முருகனை, மச்சான் சாமி என்று அழைக்கின்றனர்.
Recommended Video
தூத்துக்குடி: குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம். இது வியாழ தலம். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும். சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.
ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம்.
சூரனின் அட்டகாசம்
தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.
குருவை தேடிய சூரபத்மன்
சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் குருபகவான்.
தவம் செய்த குரு
சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார் குருபகவான். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி தவத்தில் மூழ்கினார். அப்போது கயிலையில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு. அன்னையின் சிலம்பில் இருந்து வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்கள் தோன்றினர்.
படை திரட்டிய சுப்ரமணியர்
கார்த்திகைப் பெண்கள் மூலம் வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.
குரு பரிகார ஸ்தலம்
அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம் என்று கூறினார். யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்றும் கூறிச் சென்றார்.
திருமண வரம்
அதுமுதல் திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளையை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.