For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2018: பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்... குரு பரிகார கோவில்கள்

குரு பெயர்ச்சி அக்டோபர் 11ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மை செய்தாலும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண

Google Oneindia Tamil News

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம்.

குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.

கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். பிரசித்தி பெற்ற குரு பரிகார தலங்களை கூறியுள்ளோம். நீண்ட தொலைவு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம்.

குருவித்துறை குரு

குருவித்துறை குரு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குருபகவானை குருபெயர்ச்சி நாளில் வழிபட மனக்குறைகள் தீரும்.

சென்னை பாடி திருவலிதாயம்

சென்னை பாடி திருவலிதாயம்

சென்னையில் உள்ள பாடி வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு.

தென்திட்டை குரு

தென்திட்டை குரு

திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி

கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர்.

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர்

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர்

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம்.

பட்டமங்கலம் குரு

பட்டமங்கலம் குரு


கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது.

அகரம் கோவிந்தவாடி

அகரம் கோவிந்தவாடி

அகரம் கோவிந்தவாடி தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

தக்கோலம்

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

திருச்செந்தூர் குருபகவான்

திருச்செந்தூர் குருபகவான்

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் , அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

புளியரை தட்சிணாமூர்த்தி

புளியரை தட்சிணாமூர்த்தி

புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், குற்றலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயம் இது குருபரிகார தலமாகும்.

முறப்பநாடு குரு

முறப்பநாடு குரு

நவகயிலாயத்தில் ஐந்தாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் குரு பகவான் அம்சமாக விளங்குகிறார். இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக குருவாக தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும். பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும் காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும். திருநெல்வேலியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

English summary
Guru Peyarchi Jupiter Transit is happening on Thursday Oct 11, 2018 4:49 AM IST as per Thiru Kanidha panchangam. Jupiter will move from Thula Rashi to Viruchika Rasi and stay there until Monday Nov 4. Here is the list of Guru Parikara temples in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X