மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வக்ரகதியில் வந்த குருபகவான் - யாருக்கு நன்மை
மகரம் ராசியில் அதிசாரமாக சில மாதங்கள் சஞ்சரித்த குருபகவான் தற்போது மீண்டும் தனுசு ராசிக்கு திரும்பியுள்ளார்.
சென்னை: குருபகவான் சுப கிரகம். இதுநாள் வரை மகரம் ராசியில் சனியோடு இணைந்திருந்த குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு இன்று ஜூன் 30 முதல் இடப்பெயர்ச்சியடைகிறார். தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரும் குரு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நேர்கதியில் சஞ்சரிப்பார். தனுசு ராசியில் குருவின் வக்ர சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.
தனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து இன்று முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி வரை வக்ரநிலையில் சஞ்சரித்து மீண்டும் நேர்கதிக்கு மாறும் குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி வரை தனுசு ராசியில் பயணித்து மீண்டும் மகரம் ராசிக்கு செல்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் நிறைய பேருக்கு வேலையிழப்பு, வருமானம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குருவின் இந்த பயணத்தினால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் - கொரோனா தொற்று நீங்க சிறப்பு வழிபாடு
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். புது வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்க. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
அஷ்டமத்து குரு என்றாலும் கவலை வேண்டாம் மன அமைதி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. நினைத்தது நிறைவேற அதிகாலையில் எழுந்து லலிதா சகஸ்ரநாமம் படிங்க பிரச்சினைகள் தீரும்.
மிதுனம்
குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் வக்ரநிலையில் சஞ்சரிக்கிறார். உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள். விஷ்ணு சகஸ்ராநாமம் படிங்க மனக்கவலைகள் நீங்கும்.
கடகம்
தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும், சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். எதிலும் எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு பேசிவிட்டு அப்புறம் அவதிப்படாதீங்க. சிலருக்கு வீண் அலைச்சல்கள் வரலாம் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் ஆரோக்கிய குறைபாடு வரும் மருத்து செலவு செய்து பாக்கெட் காலியாகி விடும். சிவபெருமானை நினைத்து ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாய என உச்சரியுங்கள். நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
உங்களின் அழகு ஆரோக்கியமும் கூடும். உங்களுக்கு பண வருமானம் வரும் பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்க செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். விஐபிக்களுடன் நட்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மஞ்சள் நிற உடை அணிவதும் வியாழக்கிழமை தானம் செய்வதும் சிறப்பு. கொண்டைக்கடலை சமைத்து ஏழைகளுக்கு தானம் கொடுங்க.
கன்னி
தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் திடீர் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து போங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வியாழக்கிழமை குருபகவானை நினைத்து விளக்கேற்றி வழிபடுங்கள்.
துலாம்
இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களால் செலவுகளால் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள். ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் எனவே இந்த ஒருமாதம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. வியாழக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும், மனைவி வழி உறவினர்களின் ஆதரவும் மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும். செவ்வாய்கிழமை விளக்கேற்றி குங்குமம் அர்ச்சனை பண்ணுங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு உங்க ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதுநாள் வரைக்கும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்க ஜென்ம ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரமாக செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். விட்டுக்கொடுத்து போங்க. வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சர்க்கரைப்பொங்கல் சமைத்து வீட்டில் வழிபடுங்க.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் விரைய ராசியில் சஞ்சரிக்கிறார். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்க. கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எச்சரிக்கையாக இருங்க. எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருங்க. கர்ப்பிணி பெண்கள் கவனம் தேவை. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் உள்ள குரு உங்களுக்கு லாபத்தை கொடுப்பார். உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும். பண நெருக்கடி வந்து நீங்கும். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு தட்சிணாமூர்த்தியை நினைத்து விரதம் இருங்க தடைகள் நீங்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு பத்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நலமாக இருக்கும்.