குரு பெயர்ச்சி 2018: சிம்மராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் நிம்மதியும் கிடைக்கும் காலம்
குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது. வீடு, வாகன வாங்குவதற்கான கால நேரம் கூடி வந்திருக்கிறது.
சென்னை: எதையும் தாங்கும் தைரியம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு அக்டோபர் மாதம் முதல் சுக ஸ்தானமான உங்கள் ராசிக்கு 4வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த மாற்றம் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குரு பகவானின் 5ஆம் பார்வை அஷ்டம ஸ்தானம், 7ஆம் பார்வை தொழில் ஸ்தானம், 9 ஆம் பார்வை விரைய ஸ்தானத்தின் மீதும் விழுகிறது.
இந்த குரு பெயர்ச்சியினால் உங்கள் ராசிக்கு 8,10,12 ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுகிறது. குருபகவான் 4வது வீட்டில் அமர்வது மிகச்சிறந்த கால கட்டம். யோகாதிபதி செவ்வாய் வீட்டில் குரு அமர்வது நன்மையே நடக்கும்.
கண்டங்கள் விலகும் காலம்
கடந்த 10 ஆண்டுகளாக பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறார்கள். இனி சாதனைகள் செய்யும் காலமாகும். 8வது வீட்டை குரு பார்ப்பதால் தீய கண்டங்கள் விலகும். நோய்கள் தீரும். மரண பயத்தை போக்கி காப்பாற்றும். பிள்ளைகள் வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.
பணியிட மாற்றம்
ராசிக்கு 10 ஆமிடத்தை குரு பார்ப்பதால் தொழில் ஸ்தானம் சிறப்பானது. செய்யும் தொழிலில் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். சிலருக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வேலைப்பளுவும் அதிகரிக்கும். புதிய தொழில்களை தொடங்குவார்கள்.
கணவன் மனைவி உற்சாகம்
12ஆமிடத்தை பார்ப்பதால் சுப விரையங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். நன்றாக உறக்கம் வரும், மன நிம்மதி ஏற்படும். ஆன்மீக பயணங்கள் உங்களுக்கு ஆற்றலையும் மன ஆறுதலையும் அளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயங்களையும் வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்த பின்னர் முடிவெடுக்கவும்.
குருவினால் நன்மை
ஆன்மீக செலவுகள் மற்றும் தான தர்ம செலவுகள் ஏற்படும். குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய அளவில் பிரச்சினை ஏதும் இருக்காது. மாணவர்கள் நன்கு படிக்கும் வகையில் குருபகவான் சூழ்நிலையை மேம்படுத்துவார். கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை குருபகவான் ஏற்படுத்துவார்.
மன அழுத்தம் குறையும்
வீடு, வண்டி வாகனம் சேர்க்கை அமையும். மன அழுத்தம் குறையும், அம்மா உடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளுடன் சில கருத்து மோதல்கள் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சிவ ஆலயத்திற்கு சென்று வலம் வந்து வணங்குவது நல்லது.