குரு பெயர்ச்சி 2018 - 19: கடக ராசிக்காரங்களுக்கு யோக காலம் பிறக்கப் போகுது
துலாம் ராசியில் உள்ள குரு பகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 4 ஆம் தேதியும் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
சென்னை: நம்பியவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய கடக ராசி நேயர்களே, உங்கள் ராசி அதிபதி சந்திரனுக்கு குரு நட்பானவர். அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 5 ல் அமரும் குரு ஜென்ம ராசியை பார்ப்பது நல்லதொரு அமைப்பாகும். குரு பகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 4 ஆம் தேதியும் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் நல்ல பலன்களை அளிகிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது. எனவே ரிஷபம் , கடகம், துலாம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளுக்கு சுப பலன்களை அளிக்கவிருக்கிறார்.
குரு அமரும் இடம் மட்டுமல்லாது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 11ஆமிடம், 9ஆம் இடம், ஜென்ம ராசியின் மீது விழுவதும் சிறப்பான அம்சமாகும்.
லாபம் வரும் வாய்ப்பு
இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மை தரும். 4ஆமிட குரு யோகமான பஞ்சம ஸ்தானத்திற்கு நகர்கிறார். இதன் மூலம் குரு நல்ல பலன்களை தரப்போகிறார். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், உங்கள் ராசியை பார்க்கிறார். முன்றுமே நல்ல அமைப்பு. பிரச்சினைகள் அகலக்கூடிய காலம் இதுதான். கடன் பிரச்சினைகள் விலகி சேமிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் லாபம்
9ஆம் இடத்தை பார்ப்பதால் பதவி, புகழ், வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். தந்தையின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். 5ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் பூர்வீக சொத்துக்கள் வந்து சேரக்கூடிய கால கட்டங்க. பித்ரு கடனை நிறைவேற்றுவீர்கள். நெருக்கடிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தூர பயணங்களினால் நன்மை நடக்கும்.
புரமோசன் கிடைக்கும்
உங்கள் பாக்யாதிபதி குரு 5ஆமிடத்திற்கு வருவதால் பதவிகள் தேடி வரும். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும்.
ராசியில் இருந்த ராகுவை குரு பார்ப்பதால் நோய்கள் தீரும். சுப காரியங்கள் அதிகம் நடக்கும் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். 6வது வீட்டில் பலமான சனி சஞ்சரிப்பது பலத்தை அதிகரிக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் ஏற்படும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த தடங்கள் நீங்கும். பங்காளிகள் பிரச்சினை தீரும்.
நன்மைகள் நடக்கும்
கணவன், மனைவியினால் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாள் கண்ட கனவுகள் நனவாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் நன்மைகள் நடந்தேறும்.மேலும் நன்மைகள் நடக்க பெருமாளை வணங்கலாம். தற்போது ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்யலாம்.