குரு பெயர்ச்சி 2019: கோடீஸ்வர யோகம் தரும் குரு கேது சேர்க்கை - என்னென்ன யோகங்கள்
சென்னை: குரு பகவான் முன்னேற்றத்திற்கு காரணமானவர். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பணவருமானம் கிடைப்பது இவர் அருளால்தான். எந்த வீட்டில் குரு அமர்கிறாரோ அந்த வீட்டிற்கு நற்பலன்கள் கிடைக்கும். குரு ஒரு ராசியில் பிரவேசம் செய்த உடன் அந்த வீட்டின் காரகத்துவங்கள் தூண்டப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசியில் இப்போது சனி, கேது இருக்கின்றனர். அவர்களுடன் கூட்டணி சேரப்போகிறார் குரு. இந்த சஞ்சாரத்தினால் ஏற்படும் பொது பலன்களையும் குரு எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் தனுசு ராசியில் கேது உடன் இணைவதால் பல நன்மைகள் ஏற்படப்போகின்றன.
குரு, கேது சம்பந்தப்பட்டிருப்பதால் ஆன்மிகம் தழைக்கும். கும்பாபிஷேகங்கள் அதிக அளவில் நடைபெறும். வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை மாற்றமின்றி இருக்கும். கர்நாடகா, ஊட்டி, கொடைக்கானல், இமாச்சலப் பகுதிகளில் அதிக மூடுபனியால் விவசாயம் பாதிக்கும். முக்கிய கிரகங்களான சனி, குரு பலமாக உள்ளதால் எதிர்காலம் நல்ல ராஜயோகம் தரும். வடபகுதி பிரதேசம் மிக அதிக அளவில் பாதிக்கும்.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்
பருவமழை அமோகம்
இந்த ஆண்டு குரு பெயர்ச்சியால் நாடு முழுவதும் நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். உலகத்தில் அனைத்து இடங்களிலும் சூறாவளிக் காற்றுடன் நல்ல மழை பொழியும். தமிழ்நாட்டில் ஏமாற்றிய மழை இந்த வருடம் தவறாமல் பெய்ய வாய்ப்புள்ளது. கடலில் அதிக அளவில் மழை பொழியும். புன்செய் தானியங்கள் அதிக அளவில் அறுவடையாகும். சில குறிப்பிட்ட பகுதிகளில், மழையால் அதிக அளவில் விவசாயம் பாதித்து, விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்படுவர். ஜீவ நதிகள் சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கும். அணைகளில் சிறிதளவு பாதிப்பு நேரும்.
அரசாங்கத்தில் மாற்றம்
மருந்து வகை, மின்சார வகை, இரும்பு வகை விலையேற்றம் ஏற்படும். வெடி வகைகளுக்கு பல புதிய திட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும். மர வியாபாரிகள், ஏற்றுமதி- இறக்குமதி செய்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான வரிகளை விதித்து விலை நிர்ணயம் செய்யும். கரிசல் பூமி போன்ற பகுதிகளில் மரம், செடி கொடிகள் சிறப்பாக வளரும். வனங்களில் வாழும் விலங்குகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தும். கிடங்குகளில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
குரு - கேது சேர்க்கை
கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்ந்திருந்தால் அவருக்கு கோடீஸ்வர யோகம் வரும். குரு கேது இன்னும் சில நாட்களில் இணையப்போகின்றன. அதன்பின் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த அம்சம் கிடைக்கும்.
மருத்துவ நிபுணர்கள்
நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.
ராஜயோக பலன் தரும் குரு
குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.
குரு கேது சேர்க்கை தரும் யோகம்
காமம், குரோதம், மோகம் இவை அனைத்தையும் கடந்து இறுதியாக மோட்சத்தை அடைவதற்கு உதவும் கிரகம் கேதுபகவான். யோகினி யோகம் என்றழைக்கப்படும் யோகமானது, குரு மற்றும் கேது இவர்கள் இணையும் பொழுது கிடைக்கப்படும் யோகமாகும். மேலும் குரு லக்ன சுபராக ஆட்சி வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அவர் கேதுவை பார்க்கும் பொழுது இந்த யோகம் ஏற்படுகின்றது. யோகினி யோகம் உள்ளவர்கள் சிறந்த ஆன்மீகவாதி களாகவும்,சிறந்த நற்காரியங்கள் புரிபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு, பூர்வ ஜென்மத்து வினைகள் போன்றவை இவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.