குரு பெயர்ச்சி 2019: திருமணம், குழந்தை வரம் தரும் குரு - எந்த ராசிக்கு குரு பலம் வருது
மதுரை: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணமும், புத்திரபாக்கியமும் கடவும் கொடுக்கும் வரம். நல்ல துணை அமைவதும், நல்ல புத்திரர்கள் பிறப்பதும் நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். சில மாதங்களில் குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். நிகழ உள்ள குரு பகவானால் பலம் பெறும் ராசிகள் எவை என்று பார்க்கலாம்.
தனுசு ஜென்ம குரு, மகரம் விரைய குரு, கும்பம் லாப குரு, மீனம் தொழில் ஸ்தான குரு, மேஷம் பாக்ய குரு, ரிஷபம் அஷ்டம குரு, மிதுனம் களத்திர குரு, கடகம் ருண ரோக சத்ரு ஸ்தான குரு, சிம்மம் பூர்வ புண்ணிய ஸ்தான குரு, கன்னி சுக ஸ்தான குரு, துலாம் தைரிய குரு, விருச்சிகம் குடும்ப தன வாக்குஸ்தான குரு என இம்முறை குருவின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். விருச்சிகத்தில் இருந்து இடப்பெயர்ச்சியாகி தனுசுவில் அமரும் குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பலமடையச் செய்கிறார். இந்த பார்வையால் எந்தெந்த ராசிக்கு குரு பலம் கிடைக்கிறது என்று பார்க்கலாம். திருமண வாழ்க்கை புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
யோகம் வர எல்லாம் கிடைக்கும்
ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டால் திருமண தடையும், ஐந்தாம் அதிபதி எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானதிபதி பலவீனமடைந்தால் புத்திர தடையும் ஏற்படும். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் குரு தனித்து இருந்தால் அது காரகத்தை பாதிக்கும். தாமதமாக குழந்தை பிறக்கும். குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமோ, குழந்தை பாக்கியமோ அதை அனுபவிக்க நேரம் காலம் வரவேண்டும். தசாபுத்தி அந்தாரம், கூடவே குரு பலம், பார்வை யோகம் வரவேண்டும்.
பூர்வ ஜென்ம புத்திரபாக்கியம்
மேஷ ராசிக்காரர்களே உங்க ராசிக்கு பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அவரின் பார்வையும் உங்க ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசி கிடைக்கப்போகிறது. மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியையும் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது. ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதின் ஆசைகள் நிறைவேறும்
குரு பார்வையால் திருமணம்
பொன்னவன் குருவின் பார்வை உங்கள் ராசி மீது முழுவதுமாக விழுவதால் நீங்க நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும். ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த உங்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். ஐப்பசி கார்த்திகையில் சிம்மராசி பெண்களின் கருவில் பிள்ளை வளரும் காலம் கை கூடி வருது.
மனதிற்கு பிடித்த மணவாழ்க்கை
துலாம் ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவான். உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும். எனவே தைரியமாக ஜாதகத்தை எடுங்க வரன் பார்க்க ஆரம்பிக்க நல்லமுறையில் கை கூடி வரும். ஐப்பசியில் கெட்டிமேளச்சத்தம் நிச்சயம் உங்க வீட்டில் கேட்கும்.
திருமண முயற்சிகள் கைகூடும்
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானம், குடும்ப வாக்கு ஸ்தானத்திறகு குரு நகர்வது மிகச்சிறந்த மேன்மை. குரு தனது ஏழாம்பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். அவமானங்கள் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். இதுநாள்வரை தாலிபாக்கியம் கிடைக்கலையே தடைகளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்ட பெண்கள் இனி மகிழ்ச்சியில் உற்சாகமடைவீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
ஜென்மகுருவாக அமரும் குருவின் பார்வையினால் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.
களத்திர குருவால் திருமணம் கைகூடும்
குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள்.
தோஷம் நீக்கும் குருபகவான்
காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு. ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். குருவருள் கிடைக்க முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை மாலை சாற்றலாம். வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும்.
குருவால் பாதிப்பா பரிகாரம் இருக்கு
திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.
பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த பரிகாரங்களை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.