குரு பெயர்ச்சி 2020: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவினால் நீச்ச பங்க யோகம்
குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் மகரம் ராசிக்காரர்களுக்கு சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை தரப்போகிறது.
மதுரை: குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி மகரம் ராசிக்கு ஜென்மத்தில் அமைந்துள்ளது. குருபகவானுக்கு மகரம் ராசி நீச்சமடையும் இடம் என்றாலும் குரு ஆட்சி பெற்ற சனியோடு அமர்ந்திருப்பதால் நீச்சபங்க யோகத்தை கொடுக்கிறார். குருவின் பார்வை உங்க ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. இது ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியாலும் பார்வையாலும் மகரம் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
இளகியமனமும் குழந்தை குணமும் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு குரு பகவான் வந்திருக்கிறார். ஜென்ம சனியும், ஜென்ம குருவும் உங்க ராசியில் சஞ்சரிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகாலமாக ஏழரை சனி, விரைய குருவினால் நிறைய குழப்பங்கள், எதிர்பாராத செலவுகளை கொடுத்து வந்தன. இப்போது குருவும் சனியும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.
இந்த குரு பெயர்ச்சியால் உங்களின் வாக்கு ஸ்தானத்திற்கு பலம் அதிகமாகும். வாக்கு பலிதமாகும். மதிப்பு மரியாதை கூடும். பேச்சினால் சாதிப்பீர்கள். மன உளைச்சல்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குரு பகவனின் பார்வையால் பொன்னும் பொருளும் கிடைக்கப் போகிறது.
இதுநாள் வரை பங்காளிகள் உடன் பிறந்தவர்களிடம் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். உங்களால் அவர்களுக்கு உதவியும் முன்னேற்றமும் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன உளைச்சல்கள் நீங்கும். அம்மாவின் மனம் குளிர நடந்து கொள்வீர்கள். புத்திரமும், பாக்கியமும் கிடைக்கப் போகிறது. காரணம் குருவின் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம், பண வரவு கிடைக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத பண வரவு கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும்.
குருவின் பார்வை ஏழாம் வீட்டில் கிடைப்பதால் குரு பலன் உங்க ராசிக்கு கிடைக்கிறது. தடைபட்ட திருமணம் கைகூடும். காதல் திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையும் சுமூக உறவும் ஏற்படும். ஆணோ பெண்ணோ உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகள் சரியாகும். கடன் பிரச்சினைகள் தீருவதற்கு பண வரவு வரும்.
அப்பாவிற்கு இருந்த வந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தந்தையுடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். பட்டம் பதவி புகழ் தேடி வரும். எதிர்பார்த்திராத பதவிகள் கிடைக்கும். வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். உயரதிகாரிகளிடம் இருந்த பிணக்குகள் சரியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த டிரான்ஸ்பர் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்
தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இழந்த பொருட்களை மீண்டும் பெருவீர்கள். ராசியிலேயே குரு அமர்ந்திருப்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். ஏழாம் வீட்டிற்கு சனி பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். புதிய நபர்களை நம்புவது கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. 2021 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சந்தோஷம் அதிகமாகும். சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.