Guru Peyarchi 2020: இந்த 6 ராசி, லக்னகாரர்களுக்கு குரு தசையில் கோடீஸ்வர யோகம் தேடி வரும்
சென்னை: குரு தசை காலத்தில் மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும். நல்ல வேலை, குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். நவ கிரகங்களுமே சிலருக்கு நல்லது செய்யும் சிலருக்கு தீமை செய்யும். எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் நன்மையோ தீமையோ செய்வதில்லை. முழு சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் எந்த லக்னகாரர்களுக்கு குரு தசை காலத்தில் யோகம் செய்வார் யாருக்கு பாதகம் செய்வார் என பார்க்கலாம்.
ஒருவருக்கு குரு தசை 16 ஆண்டுகள் நடக்கும். ராகு தசை முடிந்து குரு திசை தொடங்கும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த உடனேயே குரு தசை ஆரம்பமாகி விடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை என சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ஒருவருக்கு 2வது தசையாக குரு தசை வந்தால் சிறப்பாக இருக்கும். இதேபோல் 3, 4, 5வது தசையாக வரும் போதும் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் 6வது தசையாக குரு தசை வந்தால் சில பாதிப்புகளை உருவாக்கும். பொருள் இழப்பு, அரசாங்கத்தால் சொத்து பறிபோதல், வழக்குகளில் தோல்வியை ஏற்படக் கூடும்.
மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னம் மற்றும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்குவார். ரிஷப ராசி லக்னகாரர்களுக்கு நல்லதும், கெட்டதுமாக பலன் வழங்குவார். மிதுனம், கன்னி ஆகிய 2 ராசிகளுக்கும் குரு பகவான் முக்கிய கிரகமாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் வருவதால் நல்லதையும், கெட்டதையும் கலந்து வழங்குபவராகத் திகழ்கிறார். துலாம் ராசிக்கும் 50% நற்பலன், 50% கெடு பலனே குருவால் கிடைக்கும். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் தருவார்.

பெயர், புகழ், பணவரவு
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் குரு தசை காலத்தில் சொந்த வீடு வாங்கலாம். திருமணம் கைகூடும், சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். பெயர் புகழ் கிடைக்கும். பணவரவு அபரிமிதாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் குரு பலமிழந்தோ பகை, நீச்சம் பெற்றோ இருந்தாலோ, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றாலோ குரு தசை காலத்தில் கடுமையான பண நெருக்கடி ஏற்படும். கடன் தொல்லை அதிகரிக்கும்.

மேஷம் விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசி லக்னகாரர்களுக்கு குரு பாக்யாதிபதி, விரைய ஸ்தானதிபதி. இந்த ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை நன்மை செய்யும். பொருளாதார உயர்வை தருவார். காரணம் அவர் யோகாதிபதி. குரு தசை காலத்தில் பதவி உயர்வை தருவார். செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட விருச்சிகம் ராசி லக்னங்களுக்கு குரு தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். நல்லதே செய்வார்.

ரிஷபம் துலாம்
ரிஷபம் துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் அசுர குரு, குரு தேவ குரு. ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. அவர், துலாம் லக்னத்துக்கு 6ஆம் வீட்டிலும், ரிஷப லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுபகிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் விபரீத ராஜயோகத்தை தருவார். வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தை வழங்கி செல்வம் செழிக்கச் செய்வார். துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜனன ஜாதகத்தில் 11ஆம் இடத்தில் குரு இருப்பது நல்லது. லாபத்தையும் வருமானத்தையும் அள்ளித்தருவார்.

மிதுனம் கன்னி
மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கும் குரு கேந்திராதிபதி தோஷத்தை ஏற்படுத்துவார். 7 , 4 மற்றும் 10 ஆம் வீட்டில் குரு பகவான் அமரும்போது யோகம் தருவார். அதிலும் குறிப்பாக, 7 ஆம் வீட்டில் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வையில் அமரும் போது நல்ல வாழ்க்கைத்துணையை ஏற்படுத்தி கொடுப்பார். புத்திரர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கச் செய்வார்.யோகத்தை அள்ளிக்கொடுப்பார் குருபகவான்.

கடகம் சிம்மம்
சந்திரனின் வீடான கடகத்தில் குரு உச்சமடைகிறார். கடக லக்னகாரர்களுக்கும் ராசிக்காரர்களுக்கும் குரு பகவான் யோகங்களையும் நிறைய அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தருவார் குரு. பண மழையில் நனைய வைப்பார்.

சிம்மம்
சிம்ம லக்னத்துக்குப் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாக அமைந்து யோகம் தருவார் குரு. சிம்மம் குரு லக்னத்தில் நின்றால் அரசாளும் யோகம் வரும். ஐந்தில் குரு நின்றால் புண்ணியம். அந்த புண்ணியங்கள் பலனாக உங்களுக்குக் கிடைக்கும். குரு தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்த்தால் அம்சமான குழந்தைகள் பிறக்கும். பேரும் புகழும் கிடைக்கும்.

மகரம் - கும்பம்
மகரம் ராசியில் குரு நீச்சமடைவார். மகர லக்னத்துக்கு 7ஆம் வீடான கடகத்தில் அமரும் உச்சம் பெற்ற குரு லக்னத்தைப் பார்க்கும்போது, குரு தசையில் ஏராளமான நன்மைகள் நடைபெறும். குரு தசை காலத்தில் இந்த பெயர், புகழ் கிடைக்கும். கும்ப லக்னக்காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானமான தனுசில் குரு பகவான் அமரும் போது தொழிலில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். தொட்டது துலங்கும் பல வகைகளில் லாபம் கிடைக்கும்.

தனுசு மீனம்
தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு குரு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் இந்த ராசி லக்ன காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.

குரு பரிகார தலங்கள்
குரு தசை காலத்திலும், கோச்சார குரு பெயர்ச்சியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பரிகார தலங்களுக்கு சென்று வணங்க வேண்டும். குரு பகவானுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும். நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம்.

குரு ஹோரையில் பரிகாரம்
வட ஆலங்குடி என போற்றப்படும் தலம் போரூரில் அமைந்துள்ளது. அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை குருவின் ஹோரையில் நெய் விளக்கேற்றி குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.