கன்னியில் இருந்து துலாமிற்கு குரு பெயர்ச்சி : குருபகவானை வழிபட்ட பக்தர்கள்
கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ச்சியடைந்தார் குரு பகவான். ஆலங்குடி, குருவித்துறை, தென்திட்டை உள்ளிட்ட குருபகவான் ஆலயங்களில் பக்தர்கள் பரிகாரம் செய்து வணங்கினர்.
தஞ்சை: குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆலங்குடி,தென்திட்டை உள்ளிட்ட பில ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபகவான் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார். குரு பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் இன்று காலை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு ஹோமம் நடந்தது. 9 மணிக்கு சிறப்பு அபிஷேக் செய்தனர். 9.31 மணிக்கு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது வெள்ளி கவச அலங்காரம் செய்து குருபகவானுக்கு மகாதீபாராதனை நடை பெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 23ஆம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
2வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 7ஆம்தேதி தொடங்கி 14ஆம்தேதி வரை நடைபெறுகிறது.