குரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள்
தாமிரபரணி மஹா புஷ்கரம் தீர்த்தமாடுதல் திருவிழா அக்டோபர்11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க ஒரு கோடி பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் தீர்த்த கட்டம் வரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்கர திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் தீர்த்த திருவிழா ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்கிறார்.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும்போது விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணி நதியில் வருகிற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை புஷ்கரமானவர் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மகா புஷ்கரம் என்று கூறப்படுகிறது.
மகா புஷ்கர விழா
தாமிரபரணி மகா புஷ்கர விழா காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துகுமார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.
மகா புஷ்கர ஒருங்கிணைப்புக்குழு
தாமிரபரணி மகா புஷ்கர ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுவாமி பக்தானந்தா, தலைவர் ராமானந்தா, வேதானந்தா, மாதவனந்தா சுவாமிகள் மற்றும் ரத்தினவேல், வித்யாசாகர், நல்லபெருமாள், காசிவிஸ்வநாதன் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிருங்கேரி மகா சந்நிதானம், ஆதீனங்கள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் அருளாசியுடன் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் நடத்தும் தாமிரபரணி மஹா புஷ்கரம் தீர்த்தமாடுதல் திருவிழா அக்டோபர்11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது.
புண்ணிய நதி தாமிரபரணி
தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் தீர்த்த கட்டம் வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஆன்மீக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், யாத்திரைகள், ஊர்வலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனித நீராட ஏற்பாடு
இவற்றில் முக்கிய தீர்த்த கட்டங்களான பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், சுத்தமல்லி, மேலச்செவல், திருவேங்கடநாதபுரம், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் படித்துறை, குறுக்குத்துறை, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள படித்துறை, தைப்பூச மண்டபம், ஜடாயுதீர்த்த கட்டம், எட்டெழுத்து பெருமாள் கோயில் தீர்த்த கட்டம், முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களில் நீராட கடந்த ஓராண்டாக ஏற்பாடு செய்து வருகிறோம்.
|
கோடிக்கணக்கான பக்தர்கள்
இந்த படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு நீராடுவதால் தகுந்த பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் இதர ஏற்பாடுகளை செய்யவும், பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மடாதிபதிகளுடன் விவாதித்த மாவட்ட ஆட்சியர் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.