சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்
சென்னை: குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு சற்று முன் இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வியாழன் கிரகத்தின் அதிபதியான குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு செல்வது குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இன்று காலை 9:30 மணியளவில், குருபகவான் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியில் இருந்து புதனின் ஆட்சி வீடான கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி குருபரிகார ஸ்தலங்களாக கருதப்படும் ஆலங்குடி, திட்டை, குருவித்துறை, பட்டமங்கலம் உள்ளிட்ட ஸ்தலங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு யாகங்கள், பரிகார பூஜைகளில் பங்கேற்றனர். வட குருஸ்தலம் என்று போற்றப்படும் திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதலே பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். பரிகார பூஜைகளில் பங்கேற்ற பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேசுவரர் கோயில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் நாடெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆக. 15ம்தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாள்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்கள் வேத விற்பன்னர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்த ஹோமங்களில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம், அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும்.