விருச்சிகத்திற்கு இடம்பெயரும் குரு பகவான் - தாமிரபரணியில் மகா புஷ்கர விழா
குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு 10 நாட்கள் மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது.
திருநெல்வேலி: குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு அதிதேவதையாக விளங்கக்கூடிய தாமிரபரணி நதிக்கு 10 நாட்கள் மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது.
இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும். இந்த தாமிரபரணி மகாபுஷ்கர விழா புரட்டாசி 25ஆம் தேதி அக்டோபர் 11 அன்று தொடங்கி ஐப்பசி 7ஆம் தே அக்டோபர் 24 வரை நடைபெற உள்ளது. முறப்பநாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து 1 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் முக்கிய பிரமுகர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு, நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண வைணவ மாநாடு, லலிதா சகஸ்ரம பாராயணம், விஷ்ணு சகஸ்ரம பாராயணம் நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது.
நதிகளை வழிபடும் புஷ்கர விழா
புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். புஷ்கரத் திருவிழா ஆண்டுதோறும் குருபகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுவதாகும். குருபெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வார். இந்தியாவிலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
விருச்சிக ராசி தாமிரபரணி
குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது சிந்துவிலும், மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது கோதாவரி நதியின் உபநதியான பரணீதாவிலும் புஷ்கரமானவர் இருந்து அருள்பாலிக்கிறார்.
குரு பெயர்ச்சி மகா புஷ்கர விழா
இந்த ஆண்டு குருபெயர்ச்சியில் அக்டோபர் மாதம் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியின் போது அதிதேவதையாக விளங்கக்கூடிய தாமிரபரணி நதிக்கு மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும். இந்த தாமிரபரணி மகாபுஷ்கர விழா அக்டோபர் மாதம் அன்று தொடங்கி வரை நடைபெறுகிறது.
புண்ணிய நதிகளுக்கு வழிபாடு
புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.
தாமிரபரணிக்கு விழா
நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும். இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக குருவாக தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும் காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும். தாமிரபரணி நதி இவ்விடத்தில் தெற்கு நோக்கி தட்சிண கங்கையாக செல்வது தனிச் சிறப்பாகும். மகாபுஷ்கர விழா இங்கு சிறப்பாக நடைபெற உள்ளது.
யாகங்களில் பங்கேற்க அழைப்பு
இந்த மகா புஷ்கர விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவும், வேள்விகள், பூஜைகளில் பங்கேற்கவும் தங்களால் இயன்ற நன்கொடைகள் அளிக்கவும் முறப்பநாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேள்விகள், யாகங்கள் பூஜைகளில் பங்கேற்க விரும்புவர்கள் முத்துக்குமார் 99408 79669, கள்ளபிரான் 98947 67323, பாலமுருகன் 97914 55941 தொடர்பு கொள்ளவும்.