குருப்பெயர்ச்சி 2019: குரு பகவான் - தட்சிணாமூர்த்தி இருவரில் யாருக்கு பரிகாரம் செய்யலாம்
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. நவகிரக குருவிற்கும் தட்சிணாமூர்த்திக்கும் ஒரே மாதிரியான பரிகாரத்தை செய்கின்றனர். ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
Recommended Video
சென்னை: நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். குரு பெயர்ச்சி நிகழப்போகும் இந்த நேரத்தில் குருவிற்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பார்க்கலாம்.
சிவன் கோவில்களில் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற ஆடை அணிவிட்டு பரிகாரம் செய்கின்றனர். இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு நவகிரக குரு பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள். குரு ஸ்லோகத்தில் இடம்பெறும் குரு என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒன்று என நினைத்திருக்கலாம்.
குரு பெயர்ச்சி 2019-20: கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு கவலைகள் தீரும் காலம் வருது
குரு பிரகஸ்பதி
இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் குருபகவான். இவர் பிரகஸ்பதி. தேவர்களின் குருவாக திகழ்கிறார்.
சிவனும் குருவே
கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார். குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது.
குரு தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.
பிரஹஸ்பதி குரு
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.
வடக்கு தெற்கு திசைகள்
நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். எனவே இருவருமே வேறு வேறானவர்.
குரு வேறு தட்சிணாமூர்த்தி வேறு
அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக பாடி, தென் திட்டை, குருவித்துறை ஆகிய ஆலயங்கள் பல உள்ளன. அதே நேரத்தில் ஆலங்குடி, பட்டமங்கலம் உள்ளிட்ட பல சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை வணங்குகின்றனர்.
கொண்டைக்கடலை நைவேத்தியம்
குருவிற்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
தியானம் செய்வதே சிறந்தது
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
கொண்டைக்கடலை மாலை வேண்டாம்
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. குரு பெயர்ச்சி நாளில் குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்து குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.