குருவார சங்கடஹர சதுர்த்தி- கணபதியை வணங்க கவலைகள் தீரும்
தன்வந்திரி பீடத்தில் குருவார சங்கடஹர சதுர்த்தி ஹோமம் பெருவிழாவாக நடைபெறுகிறது.
வேலூர்: சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். நாளைய தினம் குருவார சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் கணபதியை வழிபட கவலைகள் தீரும். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.
நாளை வியாழக்கிழமை. குரு வாரம். எனவே குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷம். இந்த நன்னாளில் விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால் காரியத்தில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ப்பார்; காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தருவார் விநாயகர்.
சங்கடஹர சதுர்த்தி ஹோமம்
விகாரி வருஷம் ஆனி மாதம் 5 ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கட ஹர நிவாரண ஹோமம், விஷேச அபிஷேகம், மலர் அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாராதனை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெற உள்ளது.
காரியங்களிள் வெற்றி
இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சங்கடங்கள் நீங்கும், கவலைகள் தீரும், நன்மைகள் சேரும். திருமணம், குழந்தை பாக்யம், தொழில் அபிவிருத்தி ஏற்படும், தடைகள் நீங்கி சகல காரியங்களிலும் வெற்றி பெறலாம், குருவருள் திருவருள் கிடைக்கும். சங்கட ஹர சதுர்த்தி நன்னாளில், சங்கரன் மைந்தனான ஆனைமுகத்தானை அருகம்புல் மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அகலும்.
என்னென்ன பொருட்கள்
இந்த ஹோமத்தில் நவசமித்து, கரும்பு, மோதகம், அருகம்புல், நெய், வலம்புரி, இடம்புரி, வெண்கடுகு, மாசிக்காய், தான்றிக்காய், மகிழம்பூ, முந்திரி, திராட்சை, பாதாம்பருப்பு, பேரிச்சம் பழம், கர்ஜூரக்காய், அச்சுவெல்லம், நெல்பொறி, அவல், உடைச்சகடலை, கொப்பரை, தேங்காய், தேன், ஜாபத்திரி, லவங்கம், ஏலக்காய், ரோஜா மொக்கு, கடல்பாசி, கடல் நூரை, வால்மிளகு, திப்பிலி, சுக்கு, புஜபத்திரி, நவதானியம், வெட்டிவேர், கிச்சிலி கிழங்கு, வசம்பூ, நன்னாரி, ருத்திரஜடை, மட்டிப்பால், தசாங்கம், ஜவ்வாது, புணுகு, கஸ்தூரிமஞ்சள், கோரைக்கிழஙுகு, பூந்திகொட்டை, சீந்தல்கொடி, சித்தரத்தை, மூங்கில் அரிசி, பரங்கி, சக்கை, வெண்மிளகு, வால்மிளகு, நாயுருவி, தேவதாரிப்பட்டை, கருங்காலி போன்ற பல்வேறு திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளன.
கணபதியின் அருள்
மஞ்சள் வாழை, பச்சை வாழை, கற்பூர வாழை, செவ்வாழை, நாவல்பழம், விளாம்பழம், மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு, சாத்துகொடி, திராட்சை, ஆப்பிள், கொய்யா, அன்னாசி, கரும்பு, எலுமிச்சை, இளநீர் போன்ற பல்வேறு பழங்களும், பொருட்களும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்பட உள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு உபயம் செய்து காரியசித்தி கணபதியின் பேரருளை பெற்றுய்ய வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தும்பிக்கையானை வணங்குங்கள்
சங்கடஹர சதுர்த்தி நாளில் நம்பிக்கையுடன் கணபதியை வணங்கி வழிபடுங்கள். வாழ்வில் சந்தோஷம் பெருகும். நிம்மதி அதிகரிக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை, உன்னத நிலையை நிச்சயம் அடைந்தே தீருவீர்கள்.