பக்ரீத் 2018: ஹஜ் யாத்திரைக்காக மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்
ஈகை திருநாள் என போற்றப்படும் பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
சென்னை: இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் புனித மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
இறைவனின் துதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது.இது இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான ஹஜ் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஈகை திரு நாளான பக்ரீத் இந்த ஆண்டில் ஆகஸ்ட் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெரு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இப்ராஹிம் தியாகம்
இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த நாளை எண்ணி, அவர்தம் தியாகத் திறமையை போற்றும் நாளாக இந்த பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்கின்றனர்.
தியாகத் திருநாள்
பக்ரீத் திருநாளில் தான் ‘இயன்றதை இல்லார்க்கு கொடுத்து உதவுக' என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம், போன்றவற்றை பலியிட்டு அவற்றை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழை எளியோருக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
எழைகளுக்கு கொடுத்தல்
ஆடு, மாடு ஒட்டகம், என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பலியிட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. குர்பானிக்காக பலி கொடுக்கும்போது அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது". எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என் நபிகள் நாயகம் கூறியுள்ளார்.
மெக்காவிற்கு யாத்திரை
இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர்.
சாத்தான் மீது கல்லெறிதல்
5 நாட்கள் நடைபெறும் இந்த புனித பயணத்தில் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்கின்றனர். ஹஜ் புனித பயணத்திற்காக மக்கள் குவிந்துள்ளதால் மெக்கா மற்றும் மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.