அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை - 16 வகை அபிஷேகங்கள்
நாமக்கல்: அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணி அளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
11 மணிக்கு மேல் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர். தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் வடை பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், பன்னீர், தேன், நெய், இளநீர், களபம், சந்தனம், தயிர், குங்குமம், விபூதி, திரவியப்பொடி, எலுமிச்சைபழம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், அரிசிமாவு ஆகிய 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை பழம் மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தனுசு ராசியில் 3 நாட்கள் ஆறு கிரகங்கள் கூட்டணி - யாருக்கு என்ன பாதிப்பு பரிகாரம் என்ன
தன்வந்திரி பீடத்தில் அனுமன் ஜெயந்தி
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சநேயருக்கும் பால்,பன்னீர்,நெல்லிப்பொடி,சந்தனம்,மஞ்சள் போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் சகல மங்கலங்களும் உண்டாகவும்,நவகிரக தோஷங்கள் விலகவும், நினைத்த காரியம் கைகூடவும், துன்பம் விலகவும், குடும்பத்தில் இன்பம் பெருகவும் கூட்டு பிரார்த்தனை நடைப்பெற்றது தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டதுஇதில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அணையர் டாக்டர்.நந்தகோபால் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷித் துணைத்தலைவர் திரு.துளசிராம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்