செரடோனின் ஹார்மோன் செய்யும் மாயம் - மனச்சோர்வை தடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் பிரச்சினை பலரையும் மனஅழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. வேலையின்மை, நிதிச்சிக்கல், வருமானம் இல்லாமல் போனதால் பலருக்கும் மனச்சோர்வு அதிகரித்து வருகிறது.
சென்னை: கொரோனா வைரஸ் ஒருபக்கம் பரவ வெட்டுக்கிளிகள் வேகமாக படையெடுக்க இந்தியாவிற்கு இது போதாத காலமாக இருக்கிறது. வேலை செய்பவர்களுக்கு சம்பளமில்லை. பலருக்கு வேலையில்லை இந்த வேதனையில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. விவசாயிகளுக்கோ வெட்டுக்கிளிகள் மூலம் வேறு விதமான தொல்லை. வெட்டுக்கிளிகளுக்கு செரடோனின் ஹார்மோன் சுரந்து வெறித்தனமாக பயிரை வேட்டையாடுகின்றன. செரடோனின் ஹார்மோன் மனித உடம்பிற்குள் குறிப்பாக மூளைக்குள் என்னென்ன செய்யும் என்று பார்க்கலாம். ஜோதிட ரீதியாக செரடோனின் சுரப்பு யாருக்கு சீராக இருக்கும் என்று பார்க்கலாம்.
கோபமோ, சந்தோஷமோ, பயமோ துக்கமோ எல்லாமே மனித உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான். செரடோனின் எனப்படும் ஹார்மோன் சரியாக சீராக சுரந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மன அழுத்தம் மறையும் இதனால்தான் இதனை சந்தோஷ ஹார்மோன் என்கிறார்கள்.
செரடோனின் ஒருவரின் மனநிலையை சந்தோஷமாக வைத்து, பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் பாலுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. ஒருவரது உடலில் செரடோனின் அளவு குறைவாக இருந்தால், தலைவலி, எரிச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
நவ கிரகங்களின் சஞ்சாரம்
செரடோனின் என்பது நம் மனித மூளையில் இருக்கக்கூடிய ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஆகும். இது நம் மூளையில் பல்வேறு செயல்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம் மனநிலையை தீர்மானிப்பதில் இது மிக முக்கிய பங்காற்றுகிறது மேலும் இது நம் அறிவுத்திறன்,பசி,தூக்கம் மற்றும் நம் மனதில் தோன்றும் கருத்துகள் என அனைத்தையும் இந்த செரடோனின் தீர்மானிக்கிறது. இனி செரடோனின் சுரப்புக்கும் கிரகங்களின் சஞ்சாரத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம்.
மகிழ்ச்சி ஹார்மோன்
சூரிய ஒளியானது உடலில் செரடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு, மன அழுத்தத்தைத் தடுக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் சரியான நிலையில் இருந்தால் மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். விதி, மதி, கதி என்று சொல்வார்கள் அதாவது விதி என்றால் லக்கினம், மதி என்றால் சந்திரன், கதி என்றால் சூரியன். இந்த மூன்று விஷயங்களும் ஜாதகத்தில் முக்கியமான அம்சமாகும்.
பிரச்சினைளுக்கு காரணம்
ஜாதகத்தில் புதனும் சந்திரனும் சரியாக இருந்தாலே இந்த செரடோனின் சரியாக வேலை செய்யும். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம், சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன், புதன் வித்யாகாரகன், புத்தியை ஆள்பவன். புதன் என்றால் ஆற்றல், மறைந்து இருக்கும் சக்தி. இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி சரியில்லாத போதுதான் வாழ்க்கையில் குழப்பங்கள் பிரச்னைகள், தோல்விகள், குளறுபடிகள், கஷ்ட நஷ்டங்கள், தொடரும்போது டென்ஷன். மனச்சோர்வு, மனச்சிதைவு, கோபதாபங்கள் உண்டாகும்.
சரியான மனநிலை
புத்தியும், மனமும் வேறு வேறு. மனம் சீராக இருக்கும்பொழுது புத்தி நன்றாக வேலை செய்யும். இந்த இரண்டு விஷயங்களும் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றது. சந்திரன் மனதின் நாயகன், புதன் நரம்பு நாயகன் புத்தி நாயகன். மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய இயலாது. இந்த இரண்டு கிரகங்களும் சரியாக இருந்தால் மனமும் மூளையும் சரியாக வேலை செய்யும்.
செவ்வாயின் நிலை
ஒருவருக்கு வாழ்க்கை தெளிந்த நீரோடை போல போகும் போது சாதகமான, சந்தோஷமான மனநிலை இருக்கும்போது நல்ல குணம் வெளிப்படும். இறுக்கமான, கோபமான தருணத்தில் ஒருவரின் உள்ளே மறைந்து இருக்கும் மிருகத்தனமான மூர்க்ககுணம் வெளிப்படும் இந்த கோபத்திற்குக் காரகன் செவ்வாய். செவ்வாய் புதன் நல்ல நிலையில் இருந்தால் கோபத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு புத்தி வேலை செய்யும்.
புதனால் நன்மை
ஒருவர் ஜாதகத்தில் புதன் உயர்ந்த உச்சநிலையில், நல்ல யோக அம்சத்தில் இருந்தால் அமைதியும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்டிருப்பார். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவார். எதையும் கிரகித்து உள்வாங்கி கொள்வார். எந்தச் சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் எதை எப்படி செய்ய வேண்டும் என்று கணக்கு போட்டு செயல்படுவார்கள். பதுங்கி பாய்வதில் வல்லவர்கள் பக்குவமாக காய் நகர்த்தி சிக்கல்களின் முடிச்சை அவிழ்க்கும் திறன் பெற்றவர்கள்.
தீய புத்தி
ஜாதகத்தில் பலம் குறைந்த புதன் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்வார் அதனால் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். ஜாதகரின் அறிவு புத்தி, ஆற்றல் எல்லாம் தீய வழிகளில் வேலை செய்யும். காதல், கள்ளத் தொடர்பு காரியங்களுக்கு எல்லாம் வித்திடுபவர் புதன் தான். பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்வார்கள். இடத்திற்கு தக்கவாறு, நேரத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
Recommended Video
மன அழுத்தம் குறையும்
செரடோனின் ஹார்மோன் மூளை, உணவுக்குழாய் ஆகியவற்றில் உருவாகும் மகிழ்ச்சி ஹார்மோன். மன அமைதி, சந்தோச உணர்வினை கொடுப்பது இந்த செரடோனின் மட்டுமே. இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தாலே மன அழுத்தம் வரும். பழங்கள், காய்கறிகள் சத்தானதாக சாப்பிட வேண்டும். வைட்டமின் பி6, இரும்பு சத்து உணவுகள், மீன், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணி, பூசணி விரை, தக்காளி, பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும். உலர் திராட்சை சாப்பிடலாம். மிதமான சூட்டில் இருக்கும் பால் சாப்பிடலாம்.