For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐப்பசி துலாஸ்நானம் செய்யவில்லையா? வருத்தம் வேண்டாம்! முடவன் முழுக்கு இருக்கிறது!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "கடை முகம்/கடை முழுக்கு" என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "முடவன் முழுக்கு" என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் ஆகும். நாளை கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் கடைமுக புண்ணிய காலமாக அனுஷ்ட்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு:

புராணகாலத்தில் ஒரு முடவன் ஒருவர் எப்படியாவது ஐப்பசி மாதத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யவேண்டும் என்று நீண்ட தூரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார். அவர் கால் ஊனத்துடன் நடந்து வந்ததால் அவர் மெதுவாக நடந்து மாயவரம் எனும் மயிலாடுதுறையை அடைவதற்க்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்த்தது.

having a holy dip on cauvery at mayilaaduthurai is deemed very auspicious on mudavan muzukku day

ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் புனிதநீராட முடியவில்லை. எனவே அவர் அந்த தலத்து இறைவனான மயூரநாத ஸ்வாமியிடம் "ஐப்பசி மாதமும் முடிந்து விட்டது. ஆனால் என்னால் காவிரியில் நீராட முடியாமல் போனதே" என்று முறை யிட்டார். பிறகு மனக்கவலையுடன் அன்று இரவு அங்கே உள்ள மண்டபத்தில் உறங்கினார்.

அவனது கனவில் தோன்றிய இறைவன் அந்த முடவனுக்குக் காட்சி தந்து, மனம் வருந்தவேண்டாம். கார்த்திகை முதல் தேதியாகிய நாளை காலை நீ காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடிய புனித பலனை அடையலாம் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டாராம். அதன்படி அந்த முடவன் கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் புனித நீராடி முக்தியடைந்தார் என்றும் இதுவே "முடவன் முழுக்கு' பெயர் வரக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதுமுதல் ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல்தேதி அன்று துலாக்கட்டக்காவிரியில் நீராடினால் அதே பலனைப்பபெறலாம் என்ற ஐதீகம்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன், பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும், கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள், தங்கள் பத்திநிகளுடனும், புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து, பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர்,அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை, நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும்." பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.

ஒரு முறை அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான் காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.

காவிரியின் வேறு பெயர்கள்:

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

கங்கையின் பாபம் போக்கிய காவிரி:

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

குரு பகவான் துலா ராசியில் ப்ரவேசிக்கும் காலம் குரு பகவான் காவேரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இம்முறை குரு பகவான் துலா ராசியில்

கடந்த செப்டம்பர் 12 அன்று பிரவேசித்த நிலையில் சமீபத்தில் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும் குரு பகவான் துலாராசியில் தனது சஞ்சாரத்தை தொடர்வதால் இந்த ஆண்டு முழுவதுமே காவிரி ஆற்றில் புனித நீராடுவது புஷ்கர காலத்தில் குளித்த புண்ணிய பலனை தரும். மேலும் இந்த வருடம் துலா மாதத்தில் சூரியன், குரு மற்றும் சுக்கிரன் மூவரும் துலாராசியில் பயனம் செய்வாது மிகவும் விஷேஷமான நிலையாகும்

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ

கோதாவரி சரஸ்வதீ

நர்மதே சிந்து காவேரீ

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"

"கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஜோதிடத்தில் தீர்த்த யாத்திரை மற்றும் செய்யும் அமைப்பு யாருக்கு?

ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புன்னிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும்.

ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என போற்றப்படுகிறது.

கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபகிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும்

அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான்.

ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான்.

ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான்.

சுபகிரகத்தின் பார்வை பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம கார்யங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.

பன்னிரெண்டாம் அதிபதி சுபகிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய செலவு செய்ய வைக்கும்.

ஜோதிடத்தில் மேஷம்,சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும். மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

குருபகவான் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும்.

இந்த காவேரி புஷ்கரம் நடைபெறும் 12/09/2017 அன்று திருக்கணித பஞ்சாங்கபடி கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு சென்றுவிட்டார்.

மேலும் துலா ராசியில் இருந்து கும்பம், மேஷம் மற்றும் மிதுன ராசிகளை பார்க்கிறார்.

கும்ப ராசி, மிதுன ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் துலா ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும் மேஷ ராசி, கடக ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் தனுர் ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும் மிதுன ராசி, துலா ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் கும்ப ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும் அமைந்து குரு பார்வை பெறுகிறது.

எனவே, மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசி மற்றும் லக்ன காரர்கள் இந்த தீர்த்த யாத்திரையில் கலந்துக்கொள்வார்கள்.

ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல றக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம்.

English summary
A lame man who wanted to have dip in the Holy River Cauvery during Tulaa month took a strenous journey - but he could not make it to Mayilaaduthurai before the end of the month But, God granted that he be given the merit of Tula Snaanam for the dip he takes on that day, and that person was granted liberation as a result of his steadfast devotion in spite of his overwhelming handicap. Mudavan muzhukku is observed in remembrance of this incident. Having a holy dip on Cauvery at Mayilaaduthurai is deemed very auspicious on mudavan muzukku day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X