ஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு!
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: தற்போது மார்கழி மாதம் ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டது, மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள். மார்கழி- தை மாதம் இரண்டும் ஹேமந்த ருது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும். ஹேமந்த ருதுவில் பிறந்தவர்கள் உயர்ந்த நிலை அடைவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சிறப்பித்து கூறுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் ஹேமந்த ருது:
வால்மீகி ராமாயணத்தில் ஆதி சேஷனின் அம்சமான லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை அதாவது ஹேமந்த ருதுவை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார். பின்னர் மூவரும் கோதாவரி நதியில் ஸ்நானம் செய்து விட்டு வருவதை வால்மீகி "சிவபெருமானும், பார்வதி தேவியும் நந்திகேஸ்வரரும் ஸ்நானம் செய்துவிட்டு வருவதைப் போல் இருக்கிறது" என்று வர்ணிக்கிறார். என கோதாவரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் கால கணக்கு:
பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்து ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரீஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி சரத் ருதுவென்றும், ஐப்பசி, கார்த்திகை வருஷ ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருது என்றும், மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன.
ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஓர் ஆண்டு, அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றன. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து மாறுபடுகின்றன.
ருதுக்கள்:
வசந்த ருது :
வசந்த ருதுவின் அபிமான தேவதை காமதேவன். வசந்த ருதுவில் பிறந்தவர்கள் மன்மதனைப் போல் அழகானவன், சிறந்த அறிவுடையவன், வெற்றி பெறுபவன், புகழ் பெறுபவன், சங்கீதம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி மிக்கவன், சாஸ்திரம் மற்றும் அஸ்த்ர வித்தைகளை அறிந்தவன்.
கிரீஷ்ம ருது :
கிரீஷ்ம ருதுவின் அபிமான தேவதை அக்னி. கிரீஷ்ம ருதுவில் பிறந்தவர்கள் செல்வம் மிகுந்தவன், தானியக் குவியல் மிக்கவன், சிறந்த பேச்சாளன், நீண்ட குழற்கற்றைகளையுடையவன், சுக போகங்களைத் துய்ப்பவன்.
வருஷ ருது :
வருஷ ருதுவின் அபிமான தேவதை வருணன். வருஷ ருதுவில் பிறந்தவர்கள் போரில் வல்லவன், சிறந்த அறிவாளி, குதிரைகளிடம் அன்பு கொண்டவன், அழகன், கபம் மற்றும் வாயுத் தொல்லைகளால் வருந்துபவன், மகிழ்ச்சியுடன் வாழ்பவன்.
சரத் ருது :
சரத் ருதுவின் அபிமான தேவதை பார்வதி. சரத் ருதுவில் பிறந்தவர்கள் செல்வந்தன், தருமவான், தூய்மையானவன், போரில் விருப்பமுள்ளவன், வாகனங்களையுடையவன், மானமுடையவன், வாயுத் தொல்லையால் துன்பப்படுபவன் மற்றும் ரோஷமுடன் கூடியவன்.
ஹேமந்த ருது :
ஹேமந்த ருதுவின் அபிமான தேவதை ஆதிசேஷன். ஹேமந்த ருதுவில் பிறந்தவர்கள் அமைச்சனாகவும், சாமார்த்தியம் மிக்கவனாகவும், நற்குணங்களுடன் கூடியவனாகவும், நற்ச்செயல்களையும் தரும காரியங்களைச் செய்வதில் விருப்பமுள்ளவனாகவும், பணிவுடன் கூடியவனாகவும் இருப்பவன்.
சிசிர ருது :
சிசிர ருதுவின் அபிமான தேவதை ஈஸ்வரன். சிசிர ருதுவில் பிறந்தவர்கள் சிறந்த உணவு வகைகளையும், பானங்களையும் அருந்துபவன், குருவிடம் அன்பு கொண்டவன், பணிவு உள்ளவன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விருப்பமானதைச் செய்பவன், தூயமனம் கொண்டவன், ரோஷம் மற்றும் பலம் முதலியவற்றுடன் கூடியவன்.
ஹேமந்த ருதுவில் பிறந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய்:
ஹேமந்த ருதுவில் பிறந்து தெய்வாம்சம் நிறைந்து ஹோன்னத நிலை அடைந்தவர்களில் ஸ்ரீ ஆஞ்சனேயர், இன்று பிறந்த நாள் காணும் ஏசு கிறிஸ்து ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஹேமந்த ருதுவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி லக்னத்தில் ஒன்பதமதிபதி சந்திரனும் ஏழு மற்றும் பன்னிரெண்டாமதிபதி சுக்கிரனும் இணைந்து நிற்க தனஸ்தானத்தில் தனஸ்தானதிபதி ஆட்சி பெற்று பத்தாமதிபதி சூரியனுடன் இணைந்து எட்டு மற்றும் பதினோராமதிபதி புதனுடன் சேர்ந்து நிற்கின்றனர்.
மூன்றாம் வீட்டில் கேதுவும், ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், ஒன்பதாம் வீட்டில் ராகு நின்று லக்னத்தில் இருக்கும் ஒன்பதாமதிபதி மற்றும் ஆத்மகாரகனான சந்திரனை ராகு தனது திரிகோண பார்வையால் பார்க்க ராஜயோகத்தை தந்தது. மேலும் பன்னிரெண்டாம்வீட்டில் உச்சம் பெற்ற சனி பகவான் தனது திரிகோண பார்வையால் காரகாம்சமான கும்பத்தை பார்க்க மற்றொரு ராஜயோகத்தை தந்தது.
1942ல் இருந்து அரசியல் வாழ்வில் தன்னை அர்பனித்துக்கொண்டாலும் அவருக்கு ஏற்றம் தந்தது ராகு தசையே ஆகும். 1996ம் வருடம் முதல் முறையாக பிரதம மந்திரி பதவியில் இருந்ததும் ராகு தசையே. 13 நாட்களே பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எண்கணிததில் 13 என்பது கூட்டுத்தொகை 4 ராகுவின் ஆதிக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக 1998-1999ல் பிரதம மந்திரியாக பதவியேற்று பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர், இந்தியாவிற்க்கும்
பாகிஸ்தானிர்க்கும் இடையே (டெல்லி-லாகூர்) பேருந்து இயக்கியது போன்ற பல சாதனைகளை உலகறிய செய்தது திரு வாஜ்பாயி அவர்களின் ராகு தசை காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1999ல் மூன்றாம் முறையாக தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் வென்று 2004 வரை ஐந்தாண்டுகள் ஆட்சி புரிந்ததும் அவரது ராகுதசையில் தான் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆக ஹேமந்த ருதுவில் பிறந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு ஆதிசேஷன் அம்சமான ராகு பகவான் (ஸர்ப கிரஹம்) அளவிலாத ஏற்றத்தை தந்திருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே!.
அட! எங்க கிளம்பிட்டிங்க? நீங்க எந்த ருதுவில் பிறந்திருக்கிறீர்கள் என பார்க்கத்தானே?
வாழ்த்துக்கள்