ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் - தீர்த்தக்கிணறுகளை திறக்க கோரிக்கை
ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று ஏராளமானோர் புனித நீராடினர். புனித நீராட தீர்த்தக்கிணறுகளைத் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமேஸ்வரம்: ஆடி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் ஏராளமானோர் அதிகாலை முதலே அக்னிதீர்த்தக்கடலில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்து வருவதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ராமநாத சுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இன்று காலை 6 மணி முதல் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததையடுத்து அதிகமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி சென்று வருகின்றனர்.
வெறும் 3 மாதம்..! தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி
ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்து வருவதால் இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழக அரசு உடனடியாக ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.