ராகு கேது பெயர்ச்சி 2017: நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கும், தொழில் பெருகும்!
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் யோகம் தரும் வீடுகளான கடகம், மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் கடக ராகு, மகர கேதுவாக இன்று முதல் சஞ்சாரம் செய்யப்போகின்றனர். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் யோகம் தரும் வீடுகளான கடகம், மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
நிகழும் ஹேவிளம்பி ஆண்டு ஆடி 11ஆம் நாளான இன்று வியாழக் கிழமை ஜூலை 27,2017 ல் வாக்கியப் பஞ்சாங்கப்படி சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், சனி ஹோரையில், பகல் 12.39 மணிக்கு சிம்மம் ராசியில் இருந்து கடக ராசியில் ராகு பகவான் இடப்பெயர்ச்சியாகிறார். கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்.
ராகுவைப் போல கொடுப்பானுமில்லை, கேதுவைப்போல கெடுப்பானுமில்லை என்று சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் ராகுவை கொடை வள்ளல் என்றும், கேதுவை கெடுப்பவன் என்றும் நாம் கருதக் கூடாது.
அள்ளிக்கொடும் ராகு
ராகு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பார். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
ஞானம் தரும் கேது
அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் ஞானம் விருத்திக்கும். நல்ல அறிவாற்றல் சித்திக்கும். கீர்த்தி மேலோங்கும். எனவே கேதுவைப் போல கிடைப்பானுமில்லை என்றே நாம் சொல்லலாம்.
பணத்தட்டுப்பாடு நீங்கும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பகை வீடான சிம்மம் மற்றும் கும்பத்தில் ராகு, கேதுவாகிய சர்ப்ப கிரகங்கள் இரண்டும் அமர்ந்து, நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது, இந்த இரண்டு கிரகங்களும் யோகம் தரும் வீடுகளில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
புதிய தொழில் பெருகும்
கடகத்தில் ராகு அமர்வதால் நாடெங்கும் புதிய தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மனோகாரகனும், தாய்காரகனும் மற்றும் கலைகளுக்குரிய கிரகமுமான சந்திரனின் கடக ராசியில் ராகு அமர்கிறார். கேது, கும்ப ராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் செழித்து ஓங்கும். தொழிலாளி மற்றும் முதலாளித் துவத்துக்குரிய கிரகமான சனி பகவானின் மகர ராசியில் கேது பகவான் அமர்கிறார்.