கார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்
திரு அண்ணாமலையில் மலையாக அருளுகிறார் சிவபெருமான். கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் சிவபெருமான் அக்னி பிளம்பாக விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி உயர்ந்து நின்று அருள்பாலித்த நாள். பரம்பொருள் அளவிடற்கறியது
சென்னை: திருவண்ணாமலையில் மலையாக அருளும் சிவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருளும் நாளே கார்த்திகை தீப திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி நாளில் சிவபெருமான் அக்னி பிளம்பாக விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி உயர்ந்து நின்று அருள்பாலித்த நாள். பரம்பொருள் அளவிடற்கறியது என்பதை இப்பூலகில் வாழும் மக்களுக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள் ஒரு கார்த்திகை மாத பவுர்ணமி தினம். தீபத்திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் ஆலயங்களில் விளக்கேற்றி இறைவனை வழிபட வாழ்வில் நன்மைகள் நடைபெறும்.
பவுர்ணமி, அமாவாசை திதிகள் இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பவுர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் கார்த்திகை மாத பவுர்ணமி தினம் திருகார்த்திகை தீப திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக திருவண்ணாமலையில் தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
முருகனுக்கு விரதம்
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
புத்திசாலி பிள்ளைகள்
கார்த்திகை நாட்களில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
இன்ப வாழ்வு
சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் சித்ரகுப்தன் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதும் இந்த நாளில்தான். இன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகாசி மாத பவுர்ணமி தினத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அவதரித்தநாளகும். வைகாசி விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.
சகோதர ஒற்றுமை
ஆவணி மாத பவுர்ணமி நாளில் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும். புரட்டாசி மாத பவுர்ணமியில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம். ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேக திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.
வளமான எதிர்காலம்
கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். மார்கழி மாத பவுர்ணமி நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.
ஜெகம் ஆளும் வாய்ப்பு வரும்
தை மாத பவுர்ணமி நாளில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.
மாசி மாத பவுர்ணமி நாளில் மாசி மகம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு ஜெகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும். பங்குனி மாதம் பவுர்ணமி பங்குனி உத்திர நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றுதான் முருகன் - வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் ஆகிய தெய்வங்களின் தெய்வீக திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மனதிற்கு பிடித்த வரன்கள் வாசல் தேடி வரும்.