புரட்டாசி சனிக்கிழமை விரதம் சனியின் சங்கடங்களைத் தீர்க்கும்
புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
சென்னை: புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
சனிதிசை சனி புத்தி நடக்கும் காலத்திலும் கோச்சார ரீதியாக சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலத்திலும் சிலருக்கு சனிபகவானால் பாதிப்பு ஏற்படும். சனி பாதிப்புகள் நீங்க சில சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
சனிபகவான் எல்லோருக்கும் சங்கடங்களைத் தருவதில்லை. நேர்மையானவர்களுக்கு சில சோதனைகளைக் கொடுப்பார். அதுகூட பலரது உண்மை முகத்தை உணர வைக்கத்தான். சனிபகவான் சங்கடங்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட சில பரிகாரங்களைச் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவானை குளிர்விக்க என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே, இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.
சிவபூஜை
ராம நாமத்தை உச்சரிப்பவர்களையும் சிவபெருமானின் நமசிவாய எனும் நாமத்தை உச்சரிப்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை. தினந்தோறும் சிவபூஜை செய்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை.
சனி பாதிப்பு நீங்கும்
எள் அன்னம் வைத்து தினமும் சனிபகவானை துதிப்பவர்களை சனிபகவான் நெருங்குவதே இல்லை. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனிபகவான் காப்பார். பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அனைத்து வகையான தோஷங்களையும் போக்குவது பிரதோஷம். அதை தடையின்றி செய்பவர்களை சனிபகவான் தண்டிப்பதில்லை.
முன்னோர் தர்ப்பணம்
கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் கொண்டு பூஜிப்பவர்களை சனிபகவான் மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
காகத்திற்கு சாதம் அளிப்பவர்கள், புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் பித்ரு கடன் சரிவர செய்பவர்கள் சனிபகவானின் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
வலம்புரிச்சங்கு
தன்னுடைய இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்பவர்களை மகாலட்சுமிக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்தியவாசம் செய்வாள் மஹாலட்சுமி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனிபகவான். அதாவது சத்தியம் தவறாதவர்களை சனிபகவான் ஒருபோதும் பாதிப்பதில்லை. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை.