இன்று மகாளாய அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க அன்னதானம் செய்வோம்
சென்னை : இன்று மகாளய அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆறுகள், தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பு.'மறந்து விட்டதை மகாளயத்தில் விடு' என்பது பழமொழி. நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை வருகிறது. பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இறந்து போன மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர் மட்டும் வந்து திதியை பெற்றுக்கொள்வார். ஆனால் மகாளயபட்ச காலத்தில் திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியை பெற்றுக்கொள்வதாக ஐதீகம்.
நமது முன்னோர்களும், சிறுவயதில் இறந்தவர்களும், துர்மரணம் அடைந்தவர்களும், நல்ல கதி அடைவார்கள். நம்மை பெற்று வளர்த்து உயர்த்திய பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது நமது கடமை.
மகாளய பட்சம்
மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் ஆகும். இது புரட்டாசி மாத பவுர்ணமி திதியில் தொடங்கி அமாவாசையில் நிறைவு பெறுகிறது. ஒரு சில ஆண்டுகளில் ஆவணி மாத கடைசியில் வரும் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்குகிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் ஆவணியில் தொடங்கியது.
மகாளயபட்சம் வரும் நாட்களில் அமாவாசையன்று ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற தண்ணீரை, ஸ்வேதாதேவி என்பவள் இறந்து போன நமது மூதாதையர்களின் கையில் சேர்த்து விடுகிறாள் என்பது நம்பிக்கை.
புராணங்களில் தானம்
அவதார புருஷர்களான ஸ்ரீராமன், கிருஷ்ணர் ஆகியோர் கூட தங்கள் முன்னோர்களுக்கு திதி செய்தார்கள் என புராணம் கூறுகிறது.
மகாபாரதத்தின் கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான். அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார். அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது.
தர்பணம் செய்வோம்
நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் அனைத்து வசதிகளுடன் வசித்தாலும் தம்முடைய சந்ததியரைக் காண ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திக்க ஆசை கொண்டு பூலோகம் வர விரும்புகின்றனர். பித்ருக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த எமதர்மராஜன், 15 நாட்கள்பிள்ளைகளிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளும்படி கூறி பூமிக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக்காலம் மகாளய பட்சம். இந்த நாட்களில் நமது மூதாதையர்கள் அவரவர் உறவினர்கள் வீட்டுக்கு வந்து வாசலில் நிற்பார்களாம். அந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களை திருப்தி செய்ய வேண்டும். நமது வீட்டு வாசல் முன்பு நிற்கும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும்.
சந்ததியை காக்கும்
முன்னோர்களின் ஆசீர்வாதம் நமது குலத்தைக் காக்கும் என்பார்கள். அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் முன்னோர்களை திருப்தி செய்ய வேண்டும். மகாளய பட்சக் காலத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை, குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் வழங்குவதை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவார்கள். தேவர்களின் வருடக் கணக்குப்படி அவர்களுக்கு புரட்டாசி மாதம் நடுராத்திரி வேளையாகும். இந்த நேரத்தில் அமைதியாக இருக்கும், நிசப்தம் நிலவும். எனவே தேவர்களை ஆராதிப்பதற்கும், முன்னோர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது.
நோன்பு இருப்பது எப்படி?
மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி, ஆடுதுறை, குமரி துறை, திருதலங்காடு, திலதர்ப்பனபுரி, திருவையாறு, மன்னார்குடி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
பசுவிற்கு அகத்திக்கீரை
உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும். இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.
வீட்டில் பூஜைகள்
நம் முன்னோர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம்.
முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் நாம் செய்யும் தானங்கள் எல்லா முன்னோர்களுக்கும் நலம் தருகின்றன. மகாளய அமாவாசையில் நாம் செய்யும் அன்னதானம் நம் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் நம் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் நம் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்தினால் நம் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.