மோடி பதவியேற்பு ஜாதகம்- ராஜயோகம்,தொழில் முன்னேற்றம்- வல்லரசாகும் இந்தியா
நாடும், நாட்டு மக்களும் நலத்தோடும் வளத்தோடும் நல்ல அரசு அமையவேண்டும். ஆளுமையுள்ள நல்ல தலைவர் நாட்டை ஆளவேண்டும்.
சென்னை: நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கப்போகிறார். எதிர்கட்சியினரின் பிரம்மாண்ட கூட்டணி, எதிர்ப்பு அலைகளை சுருட்டி வீசி சுனாமியாக பிரம்மாண்டமாக வெற்றி பெற்று இம்முறை பதவியேற்கிறார். மோடி பதவியேற்கப்போகும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரகங்களின் சஞ்சாரம், பார்வை ஆகியவற்றை பார்க்கும் போது ராஜயோகத்தில் பதவியேற்கப்போகிறார் மோடி.
நாட்டின் வளம், தொழில் வளர்ச்சி, மக்கள் நலம், பணப்புழக்கம், மழை வளம், விவசாய உற்பத்தி என அனைத்துமே நன்றாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டில் மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள்.
சிவசேனா கட்சி சொன்னது போல ராமர் முடிசூட்டு விழா நிகழ்ந்தது ஒரு வியாழக்கிழமைதான். அதுபோல மோடி அரசு குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் பதவியேற்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி தேய்பிறை ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரத்தில் பதவியேற்றார். 5 ஆண்டுகாலம் வெற்றிகரமாக ஆட்சி நடத்தினார். இரண்டாவது முறையாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள தேய்பிறை ஏகாதசி, துவாதசி திதியில் ரேவதி நட்சத்திரத்தில் பதவியேற்கிறார் மோடி. கிரகநிலைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கிரகங்களின் சஞ்சாரம்
இன்றைய தினம் அரசு கிரகமான சூரியன் ரிஷபத்தில் புதனுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளார். மேஷத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி, கேது, மீனம் ராசியில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மோடி பதவியேற்கும் நேரம் துலாம் லக்னம். அதைவைத்து பார்க்கும் போது கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே அமைந்துள்ளது.
கூட்டணியால் என்ன பலன்
லக்னம் என்பது தலை முதல் இடம். துலாம் ராசிக்கு இரண்டாம் வீடான விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீடு குடும்பம், தன வரவு. இரண்டாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் ராகு உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். மூன்றாம் வீட்டில் நான்கு ஐந்தாம் அதிபதி சனி கேது உடன் இணைந்துள்ளார். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் அமைந்துள்ளது. ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர்.
பார்வையால் பலன்கள்
குருவின்பார்வை அரசு கிரகமான சூரியன், புதன் மேல் விழுகிறது. எட்டாம் வீட்டில் சூரியன் மறைந்திருந்தாலும் குருவின் பார்வை பலம் அரசுக்கு பலத்தை கொடுக்கிறது. கல்வித்துறையில் வளர்ச்சி அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு தன வருமானத்தை பெருக்குவார். சனி கேதுவின் பார்வை ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு, செவ்வாயின் மீது விழுகிறது. நாட்டில் ராணுவ பலம் கூடும். ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் சந்திரன் 12ஆம் வீட்டை பார்க்கிறார். வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லை ஒழியும். சண்டையிட்டுத்தான் ஜெயிக்கவேண்டும் என்பதில்லை எதிரிகளே சமாதானமாக பேச வருவார்கள்.
வலிமையான பாரதம்
நாடு இன்னும் 5 ஆண்டுகளில் வளமான வலிமையான பாரதமாக மாறப்போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பணப்புழக்கம் அதிகரிக்கும். ராஜயோகங்கள் கூடி வருகின்றன. குருவின் பார்வை பலத்தின்படி ராசியின் மீது, ராசிக்கு மூன்றாம் வீடு 5ஆம் வீட்டின் மீதும் விழுகிறது. நாட்டை விட்டு கறுப்பு பணமாக வெளியேறியவை நம் நாட்டிற்கே திரும்ப வரும் நிலை வருகிறது.
தங்கம் வெள்ளி பங்குச்சந்தை
ரேவதி நட்சத்திரம் புதன் தசை குரு புத்தியில் பதவியேற்கிறார். புதன்தசை இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அதன்பின்னர் கேது தசை வருகிறது.
பங்குச்சந்தைகள் சில மாதங்களில் இறங்கினாலும் 2020க்குள் அதி உச்சத்தை தொடும். பெட்ரோலிய பொருட்களும், தங்கம் வெள்ளியும் விலை குறையும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். உற்பத்தி விளைச்சல் அதிகரிக்கும். நாட்டின் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்கும் 2024ஆம் ஆண்டு வரை மக்கள் சுபிட்சமாக திகழும் நேரம் கூடி வந்து விட்டது. நல்லகாலம் பொறந்திருச்சி என்னோட கஷ்டமல்லாம் மறைஞ்சிருச்சு என்று மக்கள் பாடப்போகிறார்கள்.