ஐயப்ப பக்தர்களே... சபரிமலை கோயில் பிரசாதம் வீடு தேடி வரும் - போஸ்ட் ஆபிசில் புக் பண்ணுங்க
ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி சபரிமலைக்கோவில் பிரசாதத்தை தபாலில் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு தபால் மூலம் சாமி பிரசாதத்தை அனுப்ப இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் தபால் மூலம் பிரசாதம் அனுப்பப்படும். சபரிமலைக்கு செல்ல முடியவில்லையே என்று கவலைப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வீடு தேடி வரப்போகிறது. அரவணை, அப்பம், மஞ்சள்,குங்குமம் என பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார் ஐயப்பன்.
ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசனையொட்டி திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் இருக்கும் பக்தர்களை கருத்தில் கொண்டு, பிரசாதம் மற்றும் டெலிவரி திட்டத்தை தபால் துறை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சபரிமலை சாமி பிரசாதம் நாடு முழுவதும் இருக்கும் பக்தர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில், "சாமியே சரணம் ஐயப்பா! இனி இந்திய தபால் துறை மூலம் சபரிமலை சாமி பிரசாதம் நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும்.
பக்தர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் தபால் அலுவலகத்துக்கு சென்று பிரசாதம் புக்கிங் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.இத்திட்டத்திற்காக கேரள தபால் துறை பிரிவும், திருவாங்கூர் தேவசம் போர்டும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன. இந்த பேக்கேஜின் விலை 450 ரூபாய். அதில் விபூதி, குங்குமம், மஞ்சள், அர்ச்சனை பிரசாதம், நெய் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். ஒரு பக்தரால் 10 பேக்கேஜ் வரை புக் செய்ய முடியும்.
நாமக்கல் கோட்டத்தில் உள்ள நாமக்கல் தலைமை அஞ்சலகம், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் உள்பட 57 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பார்சலின் விலை ரூ.450 ஆகும். ஒரு நபர் ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சம் 10 பிரசாத பாக்கெட்டுகள் பெற முன்பதிவு செய்யலாம். இந்தப் பிரசாதம் ஸ்பீட் போஸ்ட் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும், என நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ப.முருகேசன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.