அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ!
உலகின் முழு முதற்கடவுள் அன்னை என்பது அனைவருக்கும் தெரியும். ஜோதிடத்தில் அன்னை பற்றி கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்,
ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.
அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ் வருஷம் 14.05.2017 அன்று அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடும் இக்கால கட்டத்திலும் பல இந்தியர்கள் தம் வாழ்வில் எல்லா நாளையும் அன்னையர் தினமாகவே மதித்து அன்னையை மகிழ்விக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொத்திப்பொத்தி வளர்த்த தாய்க்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்கி மீதி நாளெல்லாம் சுயநலத்தோடு
சுற்றித்திரியும் மேலைநாட்டு கலாச்சாரபடி இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தாயார் என்பவள் நமக்கு ஜீவனை கொடுத்தவள். அவளது அபிலாஷைகளைப் பூர்த்தி பண்ண வேண்டியது ஒவ்வொரு புத்திரனின் கடமையாகும். பொதுவாக இறந்த பிறகுதான் ஒவ்வொருவரின் அருமையும் நமக்கு புரிகின்றது. பெத்த தாயைக் காப்பாற்றாமல் ஆசிரமங்களில் எத்தனையோ பேர் சேர்த்துள்ளார்கள்.
அனாதை ஆசிரமங்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கிறது. தாயாரை ரக்ஷிக்காதவர்களின் குடும்பங்கள் நன்றாக இருப்பதில்லை. மாத்ரு சாபம் பித்ரு சாபத்தைவிட மேலானது (அதிகமானது) என்கிறது தர்ம சாஸ்திரம். தாயாரின் பெருமை, கயா சென்று ஸ்ரார்த்தம் பண்ணும்போது நமக்குத் தெரியும்.
பல்குனி நதிக்கரையில் 64 பிண்டங்கள் வைக்கும் போது 16 பிண்டங்கள் தாயாருக்காக மட்டும் வைக்கப்படுகின்றன. நம்மை கர்ப்பத்தில் சுமந்தபோது, பின்னர் ஒருவரை ஆளாக்க, தாயார் பட்ட கஷ்டங்களை இந்த ஷோடஸி மந்திரங்கள் மூலம் கேட்கும்போது கண்ணில் நீர் வராதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
ஐயிரண்டு திங்கள் வயிற்றில் சுமந்து இரவுபகலாய் கண்விழித்து நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து,
மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா
மாத்ரு தேவோ பவ: என்றும் மாதா,பிதா,குரு, தெய்வம் என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் போற்றும்
நமது மரபில் தாய்க்கு எப்போதுமே முதலிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜோதிடத்தில் தாய்:
ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு
நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.
ஒருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்
1.தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன்ஆட்சி, உச்சம், நட்பு என்றவகையில் வலுவாக இருக்க வேண்டும்.
2.சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது.
3.நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.
நான்காம் பாவமும் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம்.
1.லக்னத்திற்கு நான்காம் பாவதிபதி பாவிகள் மற்றும் 6,8,12 அதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க
வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.
2. நான்காம் பாவாதிபதி நீசமடைந்திருக்கக்கூடாது.
3. தனது பாவத்திற்க்கு மறைவில் அமரக்கூடாது.
4. இவை தவிர கிரகண தோஷம், பாவகர்தாரி தோஷம் போன்றவற்றிற்கு ஆட்படாமல் இருப்பது அவசியமாகும்.
மாத்ரு தோஷ பரிகாரங்கள்:
1. எந்த ஒரு தாயும் தன் குழந்தைகளுக்கு தீங்கு நினைக்கவும் மாட்டாள். சாபமிடவும் மாட்டாள். என்றாலும் சில நேரங்களில் தாய் மனம் வருந்தும்படி நேர்ந்தால் அது மாத்ரு தோஷமாகிறது.
மாத்ரு தோஷத்திற்க்கு முதன்மையான பரிகாரம் தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது.
2. உலக அன்னையான புவனேஸ்வரியை திங்கள் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வணங்கி வருவது.
3. சந்திரஸ்தலமான திங்களுர், திருப்பதி, குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கிவருவது.
4. திருச்சி மலைகோட்டை தாயுமானஸ்வாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசித்து வணங்குவது
5. அன்னை வயதில் முதியோர் இல்லங்களிலும் அனாதை ஆஸ்ரமத்திலும் இருக்கும் பெண்களுக்கு பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் உணவு, ஆடை, மூக்குக்கண்ணாடி போன்ற பொருட்களை வழங்கி ஆசி பெறுவது.
6. எக்காரணம் கொண்டும் தாய் மற்றும் மாமியார் போன்றவர்களை வேலை வாங்கி துன்புறுத்தாமல் இருப்பது.