முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் - பிறவா புளி... இறவா பனை பெருமை தெரியுமா?
பேரூரில் இறந்தால் முக்தி என போற்றப்படும் தலம் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். பிறவா புளி, இறவா பனை, புழுக்காத சாணம் என பேரூரின் பெருமையை புராணங்கள் கூறுகின்றன.
கோவை: பேரூர் பட்டீஸ்வரரை சரணடைந்தோருக்கு பிறப்பு, இறப்பு இல்லை என்பதற்கு சான்றாக கோயிலின் முன்பாக பிறவாப்புளி என்ற புளியமரம் உள்ளது. இதன் விதைகள் எங்குமே முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள்.
புராணத்தில் மேலை சிதம்பரம் எனப் புகழப்படும் இத் திருக்கோயில். பிரம்மன் மலை, வெள்ளி மலை, உமா தேவி மலை,விஷ்ணு மலை, மருதமலை என ஐம் பெரும் மலைகளின் நடுவே அமைந்துள்ளது.
இத்தலம் பற்றி திருக் கயிலாயப் பரம்பரை திருவாடுதுறை ஆதீனத்து ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய மேலை சிதம்பரம் என்கிற திருப்போரூர் புராணம் விரிவாகப் புகழ்ந்துள்ளது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் மற்றும் அருணகிரிநாதர் என பலரும் பாடிப் போற்றிய திருக்கோயில் என பல்வேறு பெருமைக்குறியது.
பேரூர் பட்டீஸ்வரர்
அப்பர் சுவாமிகள் தனது சேஷத்திக் கோவையில் ஆரூரார் பேரூர் என்னும் இடங்களே குறிப்பிட்டிருக்கிறார். கயிலாயத்தில் ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவி சமேதரமாக அமர்ந்திருக்கையில் நந்தி பகவான் அவரிடத்தில் சுவாமி தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களும் இந்த கயிலாயத்திற்கு நிகராக கருதக்கூடியது எது? என ஒரு சந்தேகம் கேட்டாராம் அதற்கு எம்மெருமான் பதில் கூறியபோது உத்ரகயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம் என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவைதான் அனால் எளிய மனிதருக்கும் சென்று முக்தியடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்போரூர் என்கிற தட்சிண கயிலாயம் உண்டு என்றாராம்.இத்தலத்தில் சுவாமி சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது.
பிறவா புளி
இத்தலத்தை சரணடைந்தோருக்கு பிறப்பு , இறப்பு இல்லை என்பதற்கு சான்றாக கோயிலின் முன்பாக பிறவாப்புளி என்ற புளியமரம் உள்ளது. இந்த மரத்தில் இருக்கும் விதைகள் மீண்டும் மரமாக முளைப்பதில்லை என்பது ஐதீகம். இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். பிறவா புளிய மரம் கோயிலின் முன்புறம், குளத்தின் குபேர மூலையில் உள்ளது.
இறவாப்பனை
இங்குள்ள பனைமரத்தை தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிராத்தனை செய்துள்ளார். இக்கோயிலின் வடப்புறத்தில் உள்ள பனை மரம், பல நூற்றாண்டுகளாய் அழியாமல் உள்ளது. அதன் பட்டைகளைத் தின்றால் நோய், நொடிகள் நீங்குகின்றன. அதனால் இதற்கு ‘இறவாப்பனை' என்று பெயர்.
புழுக்காத சாணம்
இத்தலத்து மாட்டு சாணத்தில் புழுக்கள் தோன்றுவதில்லை. இதுவும் ஒரு அதிசய நிகழ்வாகும். இத்தலத்தில் இறக்கும் உயிரினங்களுக்கு எல்லாம் இறைவனே நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை உபதேசம் செய்து தன்னிடம் சேர்த்துக் கொள்வதாக நம்பப்படுவதால் இங்கு இறக்கும் உயிர்கள் அனைத்தும் வலது காதை மேலே வைத்தபடி இறப்பதும் மற்றொரு அதிசயமாகும். மேலும் இத்திருத்தலத்தில் திருநீற்று மேடு என்ற பகுதி உள்ளது பிரம்மதேவன் யாகம் செய்த இடமாக இது கூறப்படுகிறது . இங்கு வெட்டி எடுக்கப்படும் வெண்ணிற மணலே ஆற்றங்கரை விநாயகர் ஆலயத்தில் திருநீறாக வழங்கப்படுகிறது.
எங்கு எப்படி செல்வது?
கோவை மாவட்டம்,பேரூரில் இத்திருக்கோயில் உள்ளது. கோவை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கி மி தொலைவில் சிறுவாணி சாலையில் உள்ள பேரூரில் அருள்பாலிக்கிறார் பட்டீஸ்வரர்.