சந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் திருப்பதி ஏழுமலையானுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சந்திராயன், மங்கல்யான் என சாதனை செயற்கைக் கோள்களை ஏவும் போதெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருமலைக்கு சென்று ஏழுமலையானிடம் வ
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் நேற்று பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாது நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்களும் இந்த சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். என்னதான் விஞ்ஞானிகள் இரவும் பகலும் பாடுபட்டு செயற்கைக்கோளை உருவாக்கினாலும் அது நல்ல முறையில் இலக்கை அடையவேண்டும் திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று திருப்பதி சென்று மலைமேல் வாசம் செய்யும் ஸ்ரீனிவாச பெருமாளை வேண்டிக்கொள்வார்கள். இம்முறை சந்திராயன் 2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என்று உடுப்பி கிருஷ்ணரையும், திருமலையில் ஏழுமலையானையும் தரிசனம் செய்து வேண்டுதலை வைத்து விட்டு வந்திருக்கிறார்.
இஸ்ரோ அமைப்பின் தலைவரான சிவன், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கடந்த 7ஆம் தேதி வழிபாடு மேற்கொண்டார். குடும்பத்துடன் கோவிலில் வழிபாடு செய்த சிவன், சந்திராயனின் வெற்றிக்காக பிரார்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருப்பதி ஏழுமலையானையும் கடந்த 13ஆம் தேதி தரிசனம் செய்தார்.
சந்திராயன் 2 ஜூலை 15ஆம் தேதியே ஏவப்பட இருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்றைய தினம் ஜூலை 22ஆம் தேதி சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அதிகாலையில் சந்திராயன் 1 ஏவப்பட்டது.
உலகிலேயே நிலவின் தென்துருவத்திற்கு செயற்கைக்கோளை செலுத்தும் முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் ஆலயங்கள்
தமிழகத்தில் சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் ஆலயங்களில் சந்திராயன் 2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு அபிஷேகங்கள் யாகங்கள் நடத்தப்பட்டன. திருவையாறு அருகே திங்களூருர் உள்ள கைலாசநாதர் கோவில் நவகிரக ஸ்தலங்களில் சந்திரன் பரிகால தலம். இங்கு சந்திரனுக்கு தனி சன்னதி உள்ளது. தினமும் சந்திரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமையும், பௌர்ணமி நாட்களிலும் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.
சந்திராயன் 2 வெற்றிக்கு சிறப்பு யாகம்
திங்கட்கிழமையான நேற்றைய தினம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த பயணம் வெற்றிகரமாக அமைய சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றன. இதே போல கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்ட போதும் இங்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.
நிலவில் தண்ணீர் இருக்குமா
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 ஏவப்பட்டுள்ளது. நேற்று செலுத்தப்பட்ட சந்திராயன் 2 ஒரு மண்டலம் கழித்து நேரடியாக சந்திரனில் தனது தடத்தை பதிக்கும். இதுவரை எந்த நாமும் நிலவின் தென் துருவத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பியதில்லை. முதன்முறையாக இந்தியா அனுப்பியுள்ளதால் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.
முயற்சி வெற்றிக்கு பிரார்த்தனை
அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. டிஆர்டிஓ தலைவராக டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் இருந்த காலத்திலேயே ஏவுகணை செலுத்தும் போது சிறிய அளவிலான பூஜையும், முயற்சி வெற்றியடைய பிரார்த்தனையும் செய்துள்ளனர்.
திருமலை சந்திரன் ஸ்தலம்
இஸ்ரோவின் முக்கிய திட்டங்களின் போதெல்லாம் ஏழுமலையானிடம் வேண்டுதல் வைப்பது 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரோ தலைவராக ஜி. மாதவன் நாயர், ஆர்.கே. ராதாகிருஷ்ணன் இருந்த போது செயற்கைக்கோள் ஏவும் முன்பாக திருமலை திருப்பதி சென்று ஏழுமலையானை பிரார்த்தனை செய்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 2008ஆம் ஆண்டு சந்திராயன் விண்ணில் செலுத்தப்படும் முன்பும், மங்கல்யான் விண்ணில் செலுத்தப்படும் முன்பும் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கின்றனர்.
உடுப்பி கிருஷ்ணர் திருமலை ஏழுமலையான்
திருமலை ஏழுமலையான் கோவில் சந்திரன் தலமாக திகழ்கிறது. சந்திராயன் 2 விண்ணில் செலுத்தும் முன்பாக இஸ்ரோவின் தற்போதய தலைவர் கே. சிவன் உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்திலும், திருமலை ஏழுமலையானையும் தரிசனம் செய்திருக்கிறார். நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 2 வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் வெற்றிகரமாக நிலவில் தனது தடம் பதிக்கும்.
ராகுகாலம் வேண்டாம்
அறிவியலோ ஆன்மீகமோ செய்யும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற நம்மையும் மீறி உள்ள சக்தியிடம் வேண்டிக்கொள்வதில் தவறேதும் இல்லை என்று கூறும் விஞ்ஞானிகள் ராகு காலம் முடிந்த பின்னரே கவுண்டவுன் தொடங்கியுள்ளனர். அதேபோல 13 என்ற எண்ணும் சென்டிமெண்ட் ஆக தோல்வியில் முடியும் என்று கூறுகின்றனர். இஸ்ரோ வரலாற்றில் முதன்முறையாக செவ்வாய்கிழமையன்று மங்கல்யான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தினர். செவ்வாயை ஆராயும் செயற்கைக்கோள் என்பதால் செவ்வாய்கிழமை செலுத்தியதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.