வருமான வரி தாக்கல் செய்ய வருகிறது மை டாக்ஸ் மொபைல் செயலி
அனைத்து தரப்பு மக்களும் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் மிகவும் எளிய முறையில் புதியதொரு மொபைல் செயலியை உருவாக்கி உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: வருமான வரியை எளிய முறையில் விரைவாக தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் மொபைல் செயலியை வருமான வரித்துறை உருவாக்கி வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி வரம்பிற்குள் வரும் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, வர்த்தகர்களாக இருந்தாலும் சரி அல்லது மிகப் பெரிய தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆண்டும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்வதென்றாலே அனைவருக்கும் மனதில் ஒரு இனம் புரியாத தயக்கமும் விரக்தி கலந்த வெறுப்பும் இருக்கும்.
அதுவும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான நாள் நெருங்க நெருங்க வயிற்றில் ஒரு இனம் புரியாத வெறுப்பும் பயமும் சேர்ந்து கொண்டு பாடாய்ப் படுத்திவிடும்.
காரணம் என்னவென்றால், வருமான வரித்துறையானது வருமான வரியை தாக்கல் செய்வதற்கான படிவத்தை ஒவ்வொரு ஆண்டும் புதியதாக மாற்றி அமைத்து வருமான வரியை தாக்கல் செய்பவர்களை ஒரு வழி பண்ணி விடுவதால் தான்.
இதன் காரணமாகவே, தாமாக முன்வந்து வருமான வரியை தாக்கல் செய்ய முன் வருபவர்களும் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் மாதச் சம்பளம் வாங்குபவர்களும் தங்களுக்கு வரவேண்டிய வரி வருவாயைக்கூட (Tax Credit) தேவையில்லை என்று வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வதையே தவிர்த்து விடுகின்றனர்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் வருமான வரித் துறையானது நாட்டில் உள்ள வருமான வரம்பிற்குள் வரும் அனைத்து தரப்பு மக்களும் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் மிகவும் எளிய முறையில் புதியதொரு மொபைல் செயலியை உருவாக்கி உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த செயலியை தனி நபர் வருமான வரி வரம்பிற்குள் (Individual tax payer) வரும் அனைத்து பிரிவினரும் எளிதாக கையாள முடியும் என்றும், இதன்மூலம், எளிதாகவும் விரைவாகவும் எந்தவித சிக்கலும் இல்லாமல் வருமான வரிப்படிவங்களை தாக்கல் செய்ய முடியும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதன்மூலம் வருமான வரித்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும், தங்களின் கணக்கில் எவ்வளவு வருமான வரிப் பிடித்தம்(Tax Deduction) செய்துள்ளது போன்ற விபரங்களையும், தெரிந்து கொள்ளமுடியும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சமீபத்தில் ஆயகர் சேது என்னும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.