கோபாலனை உங்கள் குழந்தையாய் பெற கோகுலாஷ்டமியில் சந்தான கோபாலனை வணங்குங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம்... பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவர் அவதரித்த திருநாள் இது. அன்றைய தினத்தை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். பதறிப்போனார்கள் தம்பதியர்.
ஏழாவது குழந்தை பலராமர். தேவகியில் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார்.
எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம்.
இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்ல பட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ன ஜயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம்.
அனேக சமயங்களில் கோகுலாஷ்டமி ஆவனி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் ரோஹினி நக்ஷத்திரத்தோடு இணைந்து நிகழும். இந்த க்ருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தை வைஷ்ணவர்கள் ரோஹினி நக்ஷத்திர அடிப்படையிலும் வைஷ்ணவரல்லாதோர் அஷ்டமியை அடிப்படையாக கொண்டும் அனுஷ்டிப்பார்கள்.
சில சமயங்களில் ஸ்மார்தர்களுக்கு அஷ்டமி திதியிலும் வைஷ்ணவர்களுக்கு ரோஹினி நக்ஷத்திரத்திலும் தனித்தனியாக நிகழ்வதும் உண்டு.
இந்த வருடம் ஆவனி மாதம் தேய்பிறை அஷ்டமியில் மஹாளயபட்சம் அமைந்திருக்கிறது. அதிலும் பித்ருக்களுக்கு மிகவும் முக்கியமான மத்யாஷ்டமி தினமாகும். பித்ருக்களுக்கு தர்பணமும் ஸ்ரார்தமும் செய்யும்போது ஸ்ரீ க்ருஷ்ணருக்கு ஜென்ம தினம் அனுஷ்டிப்பது முறையாகுமா?
அதனால்தான் இந்த வருடம் ஸ்ரீ ஜெயந்தி ஸ்மார்தர்களுக்கு ஆகஸ்ட் 14 திங்கள் அஷ்டமி திதியில் கோகுலாஷ்டமியாகவும் வைஷ்ணவர்களுக்கு ஆகஸ்ட் 16ல் ரோஹினி நக்ஷத்திரத்திலும் வருகிறது.
இந்த கோகுலாஷ்டமி தினத்தில்
அரிசிமாவில் மாக்கோலமிட்டு
கிருஷ்ணர் பாதம் வரைந்து குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், கைமுறுக்கு,அப்பம் வெண்ணை, அவல், பால், முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம்.
ஜோதிடத்தில் குழந்தை பாக்கியம்:
ஒருவருக்கு திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் இரண்டிற்க்கும் குருவின் அருளோடு சுக்கிரனின் அருளும் வேண்டும்.
சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரகம் வகிக்கிறார்.
ஒரு தம்பதியின் ஜாதகங்களில் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.
புத்திர பாக்ய தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புகள்:
ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு.
லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது அவசியம். ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தாலும் ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்து நின்றாலும் புத்திர தோஷமாகும்.
மேலும் புத்திர ஸ்தானமான ஐந்தில் நீச்சக் கிரகம் நின்றாலும் பாதகாதிபதிகள் இருந்தாலும் பத்திர தடை ஏற்படுகிறது. 6, 8, 12ம் அதிபதிகள் இருந்தால் கருச் சிதைவு. ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம் என கூறுகிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள்.
ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம். ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை. ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்.
குரு புதனின் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்.
ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் நபும்ஸ கிரகங்கள் என்று சொல்லப்படும் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் ஜந்தாம் பாவத்தோடு பாக்கிய ஸ்தானமெனப்படும் ஒன்பதாம் பாவத்தையும் பார்க்க வேண்டும். ஒன்பதாம் பாவத்தில் மேற்கூறிய அமைப்புகள் பெண்ணின் ஜாதகத்தில் இருந்துவிட்டால் திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஒரு கேள்வி குறியாகவே அமைந்துவிடுகிறது.
குழந்தை பிராப்தம் கிடைக்கும் காலம்
எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும்.
குழந்தை பாக்கியம் பெற:
பசுவின் சிறப்பை விளக்கும் விதமாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவை கோபாலனெ என புரான இதிகாசங்கள் போற்றுகின்றன.
குழந்தை பாக்கியம்பெற விரும்புபவர்கள் கோகுலாஷ்டமியன்று கோதூளி முகூர்த்த காலத்தில் கோபூஜை செய்து ஸ்ரீ சந்தான கோபாலனை மனதில் நிறுத்தி கீழ்கண்ட மந்திரத்தை கணவன் மனைவி இருவரும் கூறிவர சுக்கிர தோஷம் மற்றும் புத்திர தோஷம் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என பாரம்பரிந ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
"ஸ்லோகம்
ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீ சுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்"
உண்மையான பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் சந்தான கோபால க்ருஷ்ணனை பூஜித்து வழிபட்டால் குழந்தையாகவே கிருஷ்ணர் நம் வீட்டுக்கு வருவார்! கஷ்டமெல்லாம் போக்குவார்!