கல்யாண வாழ்க்கையில பிரச்சினையா எல்லாம் கிரகம்தான் - பரிகாரம் பண்ணுங்க
திருமணம் முடிந்த மறுநாளே சிலருக்கு பிரிவு வருகிறது. தேடி தேடி வரன் பார்த்து கல்யாணம் செய்தும் கசந்து விடுகிறது. பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்த்து திருமணம் முடிந்தும் பிரிவு ஏற்படுகிறது.
சென்னை: கல்யாணம் முடிந்த சில நாட்களில் சிலருக்கு வாழ்க்கை கசந்து விடுகிறது. படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும் என்றாலே சிலருக்கு பயம்தான் வருகிறது. பாம்பும் கீரியுமாக சிலருக்கு மண வாழ்க்கை அமைந்து விடுகிறது. திருமணம் முடிந்த நாளில் முதல் இரவு சிலருக்கு கடைசி இரவாக மாறிப்போயிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் குரு நின்ற இடம்தான் என்கின்றனர் ஜோதிடர்கள். மண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் நீங்கி கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்க சில பரிகாரங்களையும் கூறியுள்ளனர் ஜோதிடர்கள்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பலருக்கு நரகமாகவே அமைந்து விடுகிறது. திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. மணமுடித்த கையோடு பலரும் கோர்ட் படியேறுகின்றனர். மண வாழ்க்கையில் கசப்புகள், குழப்பங்கள், சிக்கல்கள், விவாகரத்து வரை செல்வதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம்.
ஒருவரின் ஜாதகத்தில் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் ரொம்ப முக்கியம் அந்த இடங்களில் சுப கிரகங்கள் பார்வை விழுவது அதை விட ரொம்ப முக்கியம். ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது மண வாழ்க்கையில் சிக்கலை தரும்.
மண வாழ்க்கையில் மகிழ்ச்சி
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீட்டுடன் சூரியன், குரு, புதன் தொடர்பு ஏற்பட உயர்ந்த குடும்பத்தில் பிறந்த வசதியான மாப்பிள்ளை கிடைப்பார். சந்திரன் தொடர்பு பெற்றால் அன்பும் பண்பும் கொண்ட கணவன் கிடைப்பார். செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் முன்கோபமும் அவசர புத்தியும் கொண்ட கணவன் கிடைப்பார். சுக்கிரன் நிற்க காரகோபாவக நாஸ்தி ஏற்படும் மண வாழ்க்கையில் பிரச்சினை என்றாலும் மனைவியை நேசிக்கும் கணவர் கிடைப்பார்.
ராகு கேது தரும் சிக்கல்
இரண்டாம் இடம் எனப்படும் குடும்ப ஸ்தானத்தில் ராகு அல்லது கேது இருப்பது, ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது மணவாழ்க்கைக்கு சிக்கலாக அமைகிறது. ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து, லக்னாதிபதி, சுக்கிரன் நீசம் அல்லது மறைந்து இருப்பதால் மணவாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
சனி குரு பார்வைகள்
சனிபகவானும், குருபகவானும் ஒருவரின் ஜாதகத்தில் சரியான நின்று பார்த்துக்கொண்டிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியை தருகிறது. குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதி. சனி 5ம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டையும், தன, குடும்ப, வாக்குஸ்தானமான 2ம் வீட்டையும் பார்ப்பதால் திருமண உறவில் சிக்கல், வெறுப்பு, கசப்பு, நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து ஏற்படுகிறது.
செவ்வாய் சுக்கிரன்
மனோகாரகன் சந்திரன் ஏழில் இருப்பது. களத்திரகாரகன் சுக்கிரன், ஆன்மகாரகன் சூரியன், தாய் காரகன் சந்திரன் ஆகிய மூவரும் 2, 7, 8 ஆகிய இடங்களில் சம்பந்தம் பெற்றிருப்பது. பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேதுவும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவும் சேர்ந்து இருந்தால் மண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது.
ஈகோ பிரச்சினை
ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருந்தால் மாமியார் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும். பத்துப் பொருத்தத்தில் ராசிப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் ஆகியவை மிகமுக்கியம். குறைந்தபட்சம் இந்த நான்கு பொருத்தம் இல்லாத ஜாதகங்களைப் பொருத்தக் கூடாது. தம்பதியினர் மனமகிழ்சியுடன் இருந்தால் மட்டுமே இல்வாழ்கை இனிமையாக இருக்கும். பெற்றோர்களின் ஈகோ தம்பதியினருக்கு நிம்மதியின்மையை ஏற்படுத்துகிறது.
பரிகாரங்கள்
வீட்டில் துளசி செடி வளர்த்து தினந்தோறும் தண்ணீர் விட்டு வர தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மஞ்சள் குங்குமம் தண்ணீரில் கலந்து துளசி செடிக்கு ஊற்றி வரவேண்டும். மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும் இந்த தோஷ நிவர்த்திக்கு யாகங்கள் செய்யலாம். சுக்கிரன் நீசம் அடைந்திருந்தால் பெண்கள் மோதிர விரலில் வைர மோதிரம் அணியலாம். இதனால் தம்பதியர் இடையே காதல் உணர்வு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலையில் உண்ணாவிரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க தம்பதியர் இடையே ஏற்பட்ட கசப்பு மறையும்.