ரிஷிகள் அம்சம் கொண்ட புறாக்கள் கருகியது நல்லதல்ல.. வருங்கால ஆபத்துகளை பட்டியலிடும் ஜோதிடர்
ரிஷிகளின் அம்சமான புறாக்களே இப்படி கருகி போயுள்ளது ஆரோக்கியமில்லாத விஷயமாகும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் பீதி கிளப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: ரிஷிகளின் அம்சங்களான புறாக்களே இப்படி கருகி போயுள்ளது, பெரும் ஆபத்துக்கு அறிகுறியாகும் என்று பிரபல ஜோதிடர் வித்யாதரன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு ஒரு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இது மெல்ல மெல்ல அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் வைக்க போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
மழை நீர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம் பொற்றாமரை குளத்து நீர் வெள்ளமென சூழ்ந்தது. கோயில் வளாகத்துக்குள் திடீரென வெள்ளம் சூழ்ந்தது எப்படி என்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் தீவிபத்து வேறு நடந்துள்ளதால் பஞ்ச பூதங்களில் நீரும், நெருப்பும் வந்துவிட்டனவே என மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜோதிடர்களும் இது அபசகுனம் என்றே கிளப்பி வருகின்றனர்.
பாதிப்புகள் வரும்
இதுகுறித்து பிரபல ஜோதிடர் வித்யாதரன் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜோதிட ரீதியில் மதுரையை பார்த்தோமேயானால் மதுரையை ஆளக் கூடிய கிரகம் சனி பகவான். இவர் தற்போது மூல நட்சத்திரம் அதாவது கேதுவின் நட்சத்திரத்தில் உள்ளார். இதனால் சனி பகவானின் ஆட்சிக்கு உள்பட்ட நகரங்களில் எல்லாம் இதுமாதிரியான பாதிப்புகள் உண்டாகும்.
நீர் புகுந்தது
மதுரை மீனாட்சி அம்மனை ஆளக் கூடிய கிரகம் புதன் ஆகும். அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளதால் சுக்கிரனும் இந்த கோயிலின் அதிபதியாக வருகிறார். இந்த இரு முக்கியமான கிரகங்களும் பாதிப்படைந்ததால் கடந்த அக்டோபர் பொற்றாமரை குளத்தின் நீர் உட்புகுந்தது. புதனும், சுக்கிரனும் சூரியனுடன் இருப்பது நன்மையை தரும். ஆனால் இவை இரண்டும் கேதுவுடன் சேரக் கூடாது.
பலவீனம்
இந்த சம்பவம் நடந்த நேரமானது கன்னியா லக்கினம் ஆகும். இது புதன் ஆகும். அந்த புதன் கேதுவுடன் இருப்பதால் தீவிபத்து நடந்துள்ளது. நவாம்சக் கட்டத்தில் பார்க்கும் போது புதன் நீட்சமாக இருக்கிறார். சுக்கிரனும் பகை வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஓரை சந்திர ஓரை. இது பெண்ணாதிக்கம் உள்ள கிரகம். இந்த கிரகங்கெல்லாம் பலவீனமடைந்துள்ள நேரத்தில் இதுபோல் தீவிபத்து நடந்துள்ளது நல்லதல்ல.
ரிஷிகள் அம்சம் கொண்ட புறாக்கள்
இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து. ஆட்சியை தொடரக் கூடியதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சட்டம் ஒழுங்கு கெடும் நிலை ஏற்படும். ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும். சமாதான சின்னமாக இருப்பவை புறாக்கள். தேவ, ரிஷிகள் அம்சங்கள் கொண்ட புறாக்கள் கருகியுள்ளது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
பஞ்சம் ஏற்படும்
கடும் வறட்சி, பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த சம்பவத்தால் பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்படக் கூடும். மார்ச் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து செவ்வாயும், சனியும் ஒரே வீட்டில் ஒன்று சேர போகிறார்கள். மே மாதம் 1-ஆம் தேதி வரை இவர்கள் ஒரே வீட்டில் இருப்பவர். இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்கள், பூகம்பங்கள், பூமியில் திடீர் பள்ளங்கள் உருவாதல், கடல் சீற்றம், ஆட்சி மாற்றம், கட்சி தாவுவது, அணிகள் மாறுவது, புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.
தேர்தல் பலன்
கடந்த 2016-ஆம் ஆண்டு எந்த கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாது என்று வித்யாதரன் கூறியிருந்தார். ஆனால் ஜெயலலிதா தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.