தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் - பெருமாளை தரிசித்தால் பலன் கிடைக்கும்
உயர் பதவியில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள், இழந்த பதவியைப் பெறப் போராடுபவர்கள், தொழில் அதிபர்கள் ஜேஷ்டா நட்சத்திர நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் பலன் கிடைக்கும்.
திருச்சி: ஜேஷ்டா நட்சத்திர நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் தலைமைப் பதவி தேடி வரும் என்பது ஐதீகம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கின்றனர்.
ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்குப் பதிலாக, தெற்குப் புறம் ஓடும் புனிதக் காவிரியில் இருந்து, தங்கக் குடங்களில் நீர் எடுக்கப்பட்டு யானை மேல் வைத்து பாசுரங்களைப் பாடியபடி எடுத்து வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள்!
பிறகு பெருமாளுக்கு அரிய மூலிகைகள் கலந்த தைலக் காப்பு சார்த்தப்படுகிறது. மறுநாள் பெரிய பாவாடை வைபவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், மா, பலா, வாழை, தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்து பிரசாதமாக பெருமாளுக்கு படைப்பது வழக்கம்!
இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகமும், அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறும். இந்திரன், ஜேஷ்டாபிஷேகத்தைச் செய்து பெருமாளின் பேரருளைப் பெற்றான் என்கிறது புராணம். எனவே உயர் பதவியில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள், இழந்த பதவியைப் பெறப் போராடுபவர்கள், தொழில் அதிபர்கள் இந்த நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் பலன் கிடைக்கும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு ஜேஷ்டாபிஷேகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் சுவாமி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் வைர கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் 24ஆம்தேதியில் இருந்து 26ஆம்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இந்த ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு 3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் வைர கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது.
ஞாயிறு மாலை உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2வது நாளான திங்கட்கிழமை முத்து கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற்றது. 3வது நாள் மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும். ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான இன்று மலையப்பசாமி மீது அணிவிக்கப்படும் தங்கக் கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே அகற்றப்படாமல் இருக்கும்.
பழனி முருகனுக்கு அபிஷேகம்
முருகனுக்கு மிகச் சிறப்பாக நடத்தப்படும் அபிஷேகங்களில் முதன்மையானது ஜேஷ்டா அபிஷேகம். இது ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அதாவது வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கப்படும் கேட்டை நட்சத்திரத்தில் இந்த அபிஷேகம் நடப்பதால் இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. உலக மக்களின் நன்மைக்காக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.