கால சர்ப்ப தோஷ காலம்: ராகு கேது நடுவே சிக்கியுள்ள கிரகங்கள் - என்ன பலன்
பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
மதுரை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம். இந்த கால சர்ப்ப யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில் சிரமங்கள் ஏற்பட்டாலும் பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.
ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இப்போதய கால கட்டத்தில் 12 ராசிகளில் மிதுனம் முதல் தனுசு வரை ராசிகளில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மகரம் முதல் ரிஷபம் வரை உள்ள ராசிகளில் கிரகங்கள் எதுவுமில்லை. இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள்தான் கால சர்ப்ப தோஷத்தில் சிக்குகின்றன.
கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கலாம். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.
தோஷங்கள் என்ன
லக்னம் முதல் 12 ஆம் இடம் வரை ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து தோஷம் மாறுபடும். லக்னம்தான் முதல் வீடு. முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும்.
திருமணத்தில் பாதிப்பு
ஏழாம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். இதே போல அமைப்புள்ள ஆணையோ பெண்ணையோதான் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டு அது நிலைக்காமல் போய்விடும்.
புத்திர தோஷம்
ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் என்ன
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், அல்லது திருப்பாம்புரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகு, கேதுவை தரிசனம் வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும்.
பயணம் செய்யும் யோகம்
பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும்.
மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கை
ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
வேலை செய்வதில் பிரச்சினை
நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். 10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அரசாங்க தண்டனையும் கிடைக்கும்.
ராகு கேது தோஷ நிவர்த்தி
வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் ராகு கேது ஒரே உருவத்தில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்திரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். தோஷத்தின் வீரியம் குறைய தன்வந்த்ரி பீடத்தில் உள்ள அஷ்ட கருடாழ்வாருக்கு தேன் அபிஷேகம் செய்து கருட ஹோமமும் அர்ச்சனையும் செய்வது நல்லது. காளஹஸ்தி திருத்தலத்தில் காளத்திநாதர் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது. நாக தோஷத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்வது திருநாகேஸ்வரம். திருப்பாம்பரம் ராகு - கேது நிவர்த்தி தலமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவில் சர்ப்ப தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஆவணி ஞாயிறு நாளில் இங்கு சென்று வழிபடலாம்.