சகல தோஷங்களும் போக்கி மோக்ஷம் தரும் கைசிக ஏகாதசி விரதம்!
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: கார்த்திகை மாததில் வளர்பிறை எனப்படும் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி விரதம் கைசிக ஏகாதசி மற்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் விஷேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. இன்று காலை 10.52 மணி முதல் நாளை காலை 9.26 வரை ஏகாதசி திதி இருப்பதால் இன்றும் நாளையும் விஷ்னு தரிசனம் மற்றும் விஷ்னு சஹஸ்ரநாம பாராயனம் செய்வதும் மோக்ஷத்தை அளிக்கும் என்பது ஐதீகம்.
பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
வைஷ்ண திவ்ய தேசங்களில் மிகவும் சிறந்த தலமாக கருதபடுவது திருக்குறுங்குடி. . ஸ்ரீமன் நாராயணனை துதிப்பவர்கள் எல்லோருமே வைஷ்ணவர்கள்தான் இதில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை நம் திருக்குறுங்குடி நம்பி பெருமாள். ஆம் இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு மனதை நெகிழ செய்யும் ஒரு சம்பவம் இன்றும் திருவரங்கத்தில் அரங்கனின் சன்னதியில் கைசிக ஏகாதசி அன்று படிக்கப் படுகிறது என்றால் அது எப்பேர்பட்ட நிகழ்ச்சி.
நம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவன் காதாரக் கேட்டுகொண்டிருக்கிறான் அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான். கைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான்.
நம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.
அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. பிரபோதின ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.
நம்பாடுவான் சொன்னான், " என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்".
பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், " நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? " என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.
நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.
ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.
கைசிக ஏகாதசி விரதமுமும் விஷ்னு சஹஸர நாம பாராயணமும்:
பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது.பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாகஅமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான பலனைத் தரும் என்பார்கள்.சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று.
இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது. சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரனாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாதசி விரதம் இருந்து விஷ்னு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேஷமாகும்.
கைசிக ஏகாதசி விரத பலன்கள்:
அஸ்வமேத யாகம் செய்த பலன் கைசிக ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு.
கைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும்,நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்.
சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம்.
குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம்.
வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது .
இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
ஒரு பசுவை அதன் கன்றோடு,அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.
கைசிக ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்.முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம்.
கைசிக ஏகாதசி விரதமிருப்போரை யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.
கைசிக ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன்:
கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள்.
கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும்,பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள்.
இன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும். பேய் மற்றும் ப்ரும்ம ராக்ஷஷர்களால் ஏற்படும் தொந்தரவுகளும் நீங்கும்.
விஷ்னு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயற்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே மோக்ஷ ஏகாதசி மற்றும் கைசிக ஏகாதசியான இன்று விஷ்னு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக!