அஷ்டம சனி தொல்லை நீங்க பைரவரை வணங்குங்க #காலபைரவாஷ்டமி
அஷ்டமத்து சனி என்பது ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவதுதான். இதனால் ஏற்படும் கஷ்டங்களை போக்குவார் கால பைரவர்.
சென்னை: அட்டமத்து சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். இதனால் ஏற்படும் சிரமங்களை நீக்குகிறார் கால பைரவர். இன்று காலபைரவாஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கி அருள் பெறுவோம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தற்போது அட்டமத்து சனி நடக்கிறது. ரிஷபத்திற்கு எட்டாவது வீட்டில் தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கிறார்.
அட்டமத்து சனியில் தொட்டது துலங்காது, அட்டமத்து சனி தசையில் அந்நிய தேசத்தில் புகழ்பெறுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.
'அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி' என்ற பழமொழி உள்ளது. தர்ம அடி என்று சொல்வார்களே அது போல போற வர்றவனை எல்லாம் அடிக்க வைக்கும்.
இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி இருக்கும். ஆனால் அது போன பிறகு அவர்களிடம் பேசினால் ஞானி போல பேசுவார்கள். அதுமாதிரி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போயிருக்கும் சனி.
"நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ" என்றெல்லாம் சொல்வார்கள்.
குறைந்த பட்சம் ஊரை விட்டு வேறு ஊருக்காவது போவது நல்லது என்று கூறுவார்கள். காரணம் இருக்கும் இடத்தில் எதுவும் ஈடேறாது. வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். அட்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள்.
அட்டமத்து சனியால் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படும். எனவே இந்த சிக்கல் தீர கால பைரவரை செவ்வரளி மாலை சூட்டி வழிபடலாம்.
சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
தேய்பிறை அஷ்டமி நாள் தினத்தில் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல சௌபாக்கியமும் கூடிவரும்.
போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்.
இன்று தேய்பிறை அஷ்டமி அதுவும் மகாகாலபைரவாஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். இன்று பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். சனிக்கிழமையன்று வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்குவதன் மூலம் அஷ்டமத்து சனி தொல்லை நீங்கும்.
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கும்.