பைரவர் ஜெயந்தி : 64 பைரவர் யாகம் 64 அபிஷேகங்கள் - தன்வந்திரி பீடத்தில் கோலாகலம்
மதுரை: கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த நாளில் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சொர்ண ஆகார்ஷண பைரவர் வழிபாடு இப்போது அதிகரித்து வருகிறது. நவம்பர் 19ஆம் தேதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் 64 பைரவர் யாகத்துடன் 64 திரவிய அபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவருக்கு நடைபெறும் யாகங்களிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று பைரவரை வழிபாடுவது வாழ்கையில் சிறந்த பலன்களை அளிக்கும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவபெருமானுடைய அம்சம் ஆவார்.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று அவரை வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிடைக்கும், எண்ணிய காரியங்கள் நிறைவேறும், நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும், தொழிலில் லாபம் உண்டாகும், வழக்குகளில் வெற்றி பெறலாம், எதிரிகள் நம்மை விட்டு விலகும், கடன் தொல்லைகள் தீரும், யம பயம் அகலும், நீண்ட ஆயுள் கிடைக்கும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குவார்.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி பைரவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம், வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுலாம், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையலாம், சனி கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலும், வெளி நாடு வேலை வாய்புகள் கிடைக்கும் போன்ற பல்வேறு நன்மைகளை பெறலாம்.
கருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன
பைரவர் ஜெயந்தி யாகம்
ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 19.11.2019 செவ்வாய்கிழமை 64 பைரவர்களுக்கு 64 தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 நபர்களால் 64 யோகினி பூஜையுடன் 64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கும், பஞ்ச திரவியத்தினால் சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், ஆராதனைகளும் 64 தீபம் ஏற்றி வழிபாடும் நடைபெற்றது.
மகா அன்னதானம்
இந்த யாகத்தில் நெய், தேன், சமித்துகள், 64 வகை பழங்கள், 64 வகை புஷ்பங்கள், பட்சணங்கள், 64 நிவேதனங்கள், மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், விவசாய பெருமக்கள், சுற்றுபுற நகர கிராம மக்கள், ஆந்திரா, கர்நாடகா மாநில மக்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். மேலும் மகா அனாதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சொர்ண ஆகார்ஷண பைரவர்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின்போதும், சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதம் பைரவா ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மிளகு தீபம் ஏற்றிய பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஆகார்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகார்ஷண பைரவரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி பூசணிக்காய் தீபம், மிளகு தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பைரவருக்கு அபிஷேகம்
நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உட்பிரகாரத்தில் அமைந்திருக்கும் காலபைரவர் சன்னதியில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் கோயிலில் மகாதேவஷ்டமி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி நேற்று காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடைபெற்றன.