தீமைகளை அழிக்கும் கால பைரவருக்கு என்ன பிடிக்கும் தெரியுமா #காலபைரவாஷ்டமி 2019
பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார் என்கின்றன புராணங்கள். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில்
மதுரை: பைரவர் பரணியில் அவதரித்தவர். சித்திரை , ஐப்பசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்மாஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. செவ்வாய்கிழமை காலபைரவாஷ்டமி ருத்ராஷ்டமி என்பதால் காக்கும் கடவுளான பைவரரை பற்றி அறிந்து கொள்வோம்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஞாயிறு, சதுர்த்தசியும் பிரதோஷ நேரமும் பைரவருக்கு உகந்தது. ஞாயிறு மாலை ராகு கால நேரத்தில் பைரவரை வணங்கலாம்.
பைரவர் அவதாரம் பற்றி சொல்லும் புராண கதைகள்
ஒரு காலத்தில் சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதேபோன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் உண்டு. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. உடனே அவர் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் தன்னையே வணங்க வேண்டும் என ஆணவத்துடன் கூறினார்.
இதனால் மனம் வருந்திய தேவர்கள் சிவனை தரிசித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க பரமேஸ்வரன் தனது உடம்பில் இருந்து பைரவரை தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி எடுத்து தன் கைகளில் ஏந்தினார். இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதைப்போக்க கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றி சென்றார்.
காசியில் அவர் நுழைந்து அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்டதும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அங்கேயே இருந்து காசியை பாதுகாக்கும் காவலராக அருள்புரிந்து வருகிறார்.
தட்சன் யாகம் நடத்தியபோது சிவனை அழைக்காமல் அவமதித்தான். இதையடுத்து தட்சனின் மகளான பார்வதிதேவி, அவன் நடத்திய யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டாள். இதையடுத்து ஈசன், தாட்சாயணியின் உடலை கைகளில் ஏந்திய படி ஆவேசத்துடன் அங்கும், இங்கும் அலைந்தார்.அப்போது மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கினார். அது பூமியில் பல இடங்களில் விழுந்தது. ஒவ்வொரு இடமும் சக்திப் பீடங்களாயின. அவற்றுக்கு பைரவரே பாதுகாவலராக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு சமயம் அந்தாகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவன் பைரவரை தோற்றுவித்ததாகவும், அவர் விஸ்வரூபம்டுத்து அறுபத்து நான்கு வடிவில் அரக்கர்களை அழித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது. இப்படி பைரவர் அவதாரங்கள் பற்றி பல புராண கதைகள் உள்ளன.
தேய்பிறை அஷ்டமி பைரவர் விரதம்
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். தேய்பிறை அஷ்டமி நாளில் அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வடைமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பைரவருக்கு அபிஷேகம்
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்மாஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் பல கோவில்களில் யாகங்கள் செய்யப்படுகின்றன. அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி பூஜிக்க ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.
ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகளான மஹா கணபதி ஹோமம், கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, 64 பலி பூஜைகள், கூஷ்மாண்ட ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை காலபைரவருக்கும், சொர்ண பைரவருக்கும் விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும், 64 ஹோமகுண்டங்களுக்கான 64 பைரவர் பூஜையும், சொர்ண பைரவர், மஹா பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி நடைபெற உள்ளது. 64 குண்டங்களில், 64 நபர்கள் பங்கேற்று நடைபெறும் மாபெரும் சதுர்ஷஷ்டி பைரவர் யாகம் நடைபெற உள்ளது.