காதல் திருமணம் யாருக்கு... களத்திர தோஷம் யாருக்கு? - திருமண தடை நீங்க பரிகாரம்
களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும். களத்திர ஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும். இந்த 7வது வீடு பாபக் கிரகங்களால் பாதிப்படைந்
சென்னை: மனிதர்களாக பிறந்தவர்களுக்கு திருமணம் முக்கியமான கால கட்டம். கால காலத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அந்த திருமணத்திற்கு வரன் தேடியும் பரிகாரம் செய்தும் பலரும் அயர்ந்து போய்விடுவார்கள். களத்திர தோஷத்தினால் திருமணத்தில் ஏற்படும் தடை ஏற்படும் காரணத்தையும் பரிகாரத்தையும் கொடுத்துள்ளோம்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை அமையும்.
3 ம் அதிபதி 7 ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். 7 ம் அதிபதி 3ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தாலோ,சந்திரன் இராகு சேர்ந்து இருந்தாலோ காதல் திருமணம் ஏற்படும்.
மாங்கல்ய தோஷம்
ஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும். 2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும். 8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும், ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது. ஆண் பெண் ஜாதகங்களில் இந்த வீடுகளில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருப்பது மிகவும் நலம்.
பெண் ஜாதகம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அது களத்திர தோஷத்தைத் தருகிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன் எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி. 7ம் வீட்டுஅதிபருடன் சூரியன் இணைந்திருந்தாலும் களத்திரதோஷம் உண்டு.
தோஷ ஜாதகம்
ராகுவால் ஏற்படும் தோஷங்களில் திருமணத் தடை முக்கியமானது. லக்னத்துக்கு ஏழில் உள்ள ராகு திருமணத் தடைகளை ஏற்படுத்துவார். லக்னத்துக்கு இரண்டு, எட்டில் உள்ள ராகு வீண் வழக்குகள், வம்புகள், குடும்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றை தருவார். ஐந்தாம் இடத்தில் உள்ள ராகு குழந்தை பாக்கிய தடையை உண்டாக்குவார்.
திருமணம் நடைபெறும் அமைப்பு
ஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன. அதன்படி 2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும். 2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ, பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது. 7ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள் பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும். லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில் சுபக் கிரகம் இருக்க வேண்டும்.
இனிமையான இல்வாழ்க்கை
7வது இடத்து அதிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற ஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
திருமணம் கைகூட பரிகாரம்
தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை மாற்றி போட்டு வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
குருபகவான் வழிபாடு
செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். திருச்செந்தூரில் முருகனையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வர திருமணம் நிச்சயமாகும். வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
ராகுகாலத்தில் பூஜை
ஞாயிறு தோறும் ராகு காலத்தில் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் ஸ்தலத்துக்கு சென்று புற்றுக்கு முன்பு பால் வைத்து வழிபட வேண்டும். செவ்வாயுடன் - ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை போட்டு வழிபட வேண்டும்.
சொர்ண ஆகார்ஷண பைரவர்
திருமணத் தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருமண தடை நீக்க யாகமும், சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படுகிறது.