பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்து தரிசனம் தந்த கள்ளழகர்
கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வந்து தரிசனம் கொடுத்துள்ளார். அழகர் பச்சை வண்ண பட்டு அணிந்ததால் இந்த ஆண்டு விவசாயம் நன்கு செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறாவிட்டாலும் அழகர் கோவிலில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி தரிசனம் கொடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு நாடு செழிக்க நல்ல மழை பெய்வதோடு விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
திருமாலிருஞ்சோலை எனப்படும் திவ்விய தேசத்தில் கருவறையில் மூலவராக பெருமாள் ஸ்ரீபரமசுவாமி கல்யாண சுந்தரவல்லி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். உற்சவர் அழகர், சுந்தரராஜ பெருமாள். பாண்டிய நாட்டு வைணவ தலங்களில் சிறப்பான இந்த தலம் பல ஆழ்வார்களால் பாடப்பெற்றுள்ளது.
Recommended Video
கள்ளழகர் பெயருக்கு ஏற்றார் போல பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன்தான். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது. அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது.
அழகர் மலையில் சித்திரை திருவிழா
அபரஞ்சி என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள். அதனால்தான் மலைமீது ஏறி வந்து தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை மலையை விட்டு இறங்கி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார் கள்ளழகர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு விட்டதால் அழகர் மலையை விட்டு இறங்க முடியவில்லை. மலையை விட்டு இறங்காவிட்டாலும் கள்ளழகர் அழகர் மலையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் தரிசனம் கொடுத்தார்.
தங்கப்பல்லாக்கில் கண்டாங்கி புடவை
அழகர் மலையில் சித்திரை திருவிழா பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது. முதலில் சிவப்பு நிற கண்டாங்கி புடவை கட்டி வேல்கம்பு சாற்றி, சவுரிக்கொண்டையுடன் தங்கப்பல்லாக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். மதுரைக்கு கிளம்பும் போது இதே கோலத்தில்தான் அதிர்வேட்டு முழங்க வருவார் கள்ளழகர்.
தங்க குதிரை வாகனம்
வைகை ஆறு போல கோவில் வளாகத்தில் தொட்டி கட்டப்பட்டிருந்தது. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். அப்போது உடலில் வெண் பட்டும் மேலே பச்சைப்பட்டும் அணிந்திருந்தார் கள்ளழகர். அழகர் பச்சைப்பட்டு அணிந்திருந்ததால் மழைவளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
அழகரும் ஆடைகளும்
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
மழை வளம் எப்படி
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.
பச்சைப்பட்டு கட்டிய அழகர்
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப்பட்டுதான் உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இந்த ஆண்டும் கள்ளழகர் பச்சைப்பட்டு கட்டி தங்கக்குதிரை வாகனம் மீதேறி வந்து தரிசனம் கொடுத்தார்.
மண்டூக முனிவர் சாபம்
மாலையில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். கள்ளழகரை நேரில் தரிசிக்க முடியலையே என்ற கவலையில் இருக்கும் பக்தர்களுக்காகவே மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி https://tnhrce.gov.in/ என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அழகரை நேரில் காண முடியாவிட்டாலும் ஆன் லைனில் தரிசனம் செய்தனர் பக்தர்கள்.