சித்ரா பௌர்ணமி வந்தது.. அழகர் மதுரைக்கு வரவில்லை.. ஆற்றிலும் இறங்கவில்லை.. சோகத்தில் பக்தர்கள்!
சித்திரை திருவிழான்னு வந்துட்டா மதுரை வாசிங்க சாதி மதத்தை கடந்து ஒண்ணா கூடி கோலாகலமாக கொண்டாடுவாங்க.
மதுரை: சித்ரா பௌர்ணமி நாளில் வாராரு .. வாராரு.. அழகர்வாராரு.. பாட்டை கேட்டாலே போதும் புல்லரிக்கும்... அழகர்மலையில கட்டாங்கி பட்டு கட்டு தங்க பல்லாக்கில கிளம்புறப்ப போடுற அதிர்வேட்டு சத்தம் மதுரை மூணுமாவடியில எதிரொலிக்கும். அதைக்கேட்ட உடனேயே எதிர்சேவைக்கு தயாராகிடுவாங்க மதுரைவாசிகள். வைகை ஆறும் உற்சாகமாக ஓட ஆரம்பிச்சிடும். இந்த வருஷம் எதுவுமே இல்லாம போனதால எதையோ இழந்துட்ட சோகத்தில இருக்காங்க மதுரைவாசிங்க. சித்ரா பௌர்ணமியில கால் படாம போனதால ரொம்ப கவலையில சத்தமில்லாம ஓடிட்டிக்கிட்டு இருக்கு வைகை.
Recommended Video
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால் வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்து வந்தார். திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது சைவ-வைணவ திருவிழாக்களை இணைக்கும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். அதே போல அழகர் வரும் பாதையையும் மாற்றி, அதுவரை கள்ளர் இன மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பாதையை மக்களும் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்தார். அது முதலே அழகர் அந்த வழியாக மதுரைக்கு வந்து தேனூர் போய் பின் மீண்டும் மலைக்கு திரும்புவார்.
சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக ஆண்டு தோறும் சித்திரை அமாவாசையில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மற்றும் தேனூர் மண்டபத்தில் விழாவிற்கான முகூர்த்தக் கால் ஊண்டப்படும். பக்தர்கள் முகூர்த்தக் கால் ஊன்றிய நாளிலிருந்து மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
சித்ரா பௌர்ணமி 2020 : பாவம் தீர்ந்து புண்ணியம் அதிகரிக்க சித்ரகுப்தனை வணங்குங்க
கள்ளழகர் புறப்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணமும் தேரோட்டமும் முடிந்த பின்னர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் அலங்காரத்தில் மதுரைக்கு கிளம்புவார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் ஆக மாறியது. கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். கள்ளழகர் வரும் போது கூடவே அழகர் வேடம் போட்டு கையில் தீவட்டி பிடித்தும் சிலர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டும் ஆடிப்பாடி வருவதை பார்க்கவே அம்புட்டு அழகாக இருக்கும்.
கள்ளழகர் எதிர்சேவை
மலையை விட்டு இறங்கி வரும் போது கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வரும் கள்ளழகரை காண கூட்டம் அலைமோதும். வழியெங்கும் மண்டகப்படி அமைத்திருப்பார்கள். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக அதிகாலையில் மதுரைக்குள் நுழைவார். மூன்று மாவடியில் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைக்கும் மக்கள் போடும் குலவை சத்தம் விண்ணை எட்டும்.
அழகருக்கு ஆண்டாள் மாலை
வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எதிர்கொண்டு அழைக்க எல்லோருக்கும் தரிசனம் கொடுத்து விட்டு தல்லாகுளம் அம்பலகாரர் மண்டபத்திலும் எதிர்சேவையை ஏற்றுக்கொண்டு பெருமாள் கோவிலில் தங்கி ஓய்வெடுப்பார் கள்ளழகர். நள்ளிரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனத்திற்குப் பிறகு, தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாளுக்கு அலங்காரம் நடைபெறும். குதிரைக்கு வெட்டிவேர் மாலை சூட்டி அலங்கரிப்பார்கள். கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிவித்து அலங்கரிப்பார்கள்.
வைகையில் கள்ளழகர் எழுந்தருளல்
தல்லாக்குளத்தில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் கிளம்பும்போது போடும் அதிர்வேட்டு சத்தம் வைகையில் அலை அலையாய் திரண்டிருக்கும் மக்களின் காதுகளில் கேட்கும். சாமி கிளம்பிருச்சு வாங்க ஆத்துக்கு போகலாம் என்று வீடுகளில் இருந்து சாமி பார்க்க கிளம்புவார்கள். ஆடி ஆடி அசைந்து வரும் அழகர் வைகையை அடையும் போது கிழக்கே சூரியன் உதயமாக தொடங்கி விடும். மேற்கே முழு நிலவு கள்ளழகரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்.
பக்தர்களுக்கு தரிசனம்
கள்ளழகரை காண வீர ராகவப்பெருமாளும் காத்துக்கொண்டிருப்பார். எதிர்கொண்டு அழைக்கும் வீரராகவ பெருமாளுடன் மாலை மாற்றிகொள்வார். இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என்று பக்தர்கள் காத்திருக்க வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாட்டு ஒரு பக்கம் உற்சாகமாக பாட வைகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்தருவார் கள்ளழகர். நீர் மோர், பானகம், ரோஸ் மில்க், சர்பத் என பலரும் பந்தல் போட்டு பக்தர்களுக்கு இலவசமாக கொடுப்பார்கள். அதை வாங்க ஒருபக்கம் கூட்டம் அலை மோதும்.
தரிசிக்க கூடும் கூட்டம்
அனுமன், கள்ளழகர் வேடம்போட்டு ஆடி வரும் பக்தர்கள் தண்ணீரை உற்சாகமாக பீய்ச்சி அடிப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மதுரை மட்டுமல்லாது தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என சுற்றுவட்டார மாவட்ட மக்கள் அழகரை தரிக்க கூடுவார்கள். வைகை ஆற்றங்கரை வழியாக வண்டியூரை அடையும் கள்ளழகர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனத்தை ஏற்றுக்கொள்வார். மறுநாள் விடியற்காலை சந்தனக்காப்பில் அலங்கரிப்பார்கள். இது சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டளை காலம் காலமாக நடைபெறுகிறது.
மண்டூக மகரிஷி சாப விமோசனம்
பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபத்திற்கு புறப்படுவார். தங்கக் கருட வாகனத்தில் செல்லும் பெருமாள் தன் வருகைக்காக மண்டூகமாக காத்திருக்கும் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பார். அன்று இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏழாம் நாள் காலையில் மோகினி அலங்காரத்தில் காட்சி தரும் பெருமாள், பிற்பகலில் அனந்தராயர் பல்லாக்கில் ராஜங்க திருக்கோலத்துடன் புறப்பட்டு இரவு சேதுபதி ராஜா மண்டபத்திற்கு வந்து தங்குவார்.