சுலபமா ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கனுமா? காமிகா ஏகாதசி விரதமிருங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்குறிய காமிகா ஏகாதசி விரதம் அனுஷடிக்கப்படுகிறது. இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தினமும் சந்தியாவந்தனம் முதலிய கர்மங்களை முறையாக செய்யும் பிராமணர், மற்றும் வேதம் ஓதும் வேதிய அந்தணர்,இறைநிலை அடைந்தர்கள் ஆசிரியர்கள் ஆகியவர்களை கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ, குருவிற்கு பாதகம் செய்தாலோ, குரு நிந்தனை செய்தாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.
ராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு ப்ரம்மஹத்தி ் ஸம்பவித்தன. ராவணன் ப்ராமணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது. ராவணன் அசுரனே ஆனாலும் அவன் வேதம் ஓதும் அந்தனன் என்பதால் அவனை கொன்ற மானிட ரூபம் கொண்ட இறைவனுக்கும் ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத்தில் ப்ரம்ம ஹத்தி தோஷம்:
ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் - சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை.
ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்திகாலத்தையும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். அக்காலகட்டத்தில்கோசரத்தில் 5ம் இடம் மற்றும் 9ம் இடம் பாதிப்பு இல்லாத காலகட்டம் பார்த்துபரிகாரவழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் தோஷம் விலகும்.
பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன?
பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும்.
காமிகா ஏகாதசி
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.
இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. இதன் மகிமையை நாரதருக்கு பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மா எடுத்து சொல்லும் போது ,காமிகா ஏகாதசி விரதம் ஒரு பிராமணனை கொன்ற பாபத்திலிருந்து கூட விடுவிக்கும் எனக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு இந்த ஏகாதசியின் மகிமை பற்றி எடுத்து சொல்லும் போதும் இதையே கூறுகிறார்.
காமிகா ஏகாதசிக்கு ஸ்ராவண கிருஷ்ண ஏகாதசி எனவும் பெயருண்டு.
காமிகா ஏகாதசியை பற்றிய கதை
ஒரு காலத்தில் ஒரு பண்ணையார் பிராமணர் ஒருவரை சண்டையின் போது தவறுதலாக கொன்று விடுகிறார். தனது தவறை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக அந்த பிராமணரின் இறுதி சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.வெகுண்ட ஊர் மக்கள் அவரை விரட்டினர்.
மனது வருத்தமடைந்த பண்ணையார் ஒரு சன்யாசியை அணுகி தனது வருத்தத்தை தெரிவித்தார். அவரும் காமிகா ஏகாதசி விரதத்தை பற்றி கூறி அது எந்தவிதமான பாபத்தையும் நீக்கும் எனக் கூறினார். பண்ணையாரும் அதே மாதிரி விரதமிருந்து விஷ்ணுவின் சிலையருகேயே தூங்கினார். அந்த இரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி அவரின் பிரம்மஹத்தி பாபம் தொலைந்தது எனக் கூறினார். பண்ணையார் காமிகா ஏகாதசி விரதமிருந்ததே காரணம் எனவும் உரைத்தார்.
காமிகா ஏகாதசி விரத பலன்கள்:
அஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு.
காமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும்,நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்.
சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம்.
குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம்.
வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது .
இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
ஒரு பசுவை அதன் கன்றோடு,அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.
காமிகா ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.
இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்.முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம்.
காமிகா ஏகாதசி விரதமிருப்போரை யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.
காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன்:
காமிகா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள்.
காமிகா ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள்.
காமிகா ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும்,பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள்.
இன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.