சூரசம்ஹாரம் முடிந்த முருகனுக்கு தெய்வானையோடு திருக்கல்யாணம் - அறுபடை வீடுகளிலும் கோலாகலம்
சூரனை சம்ஹாரம் செய்து வெற்றி வேல் வீரவேல் என்று முழக்கத்தோடு தேவர்களை காத்த அழகன் முருகப்பெருமானுக்கு தனது மகளை மணம் முடித்துக்கொடுத்தான் இந்திரன். அந்த தெய்வீக திருமணம் முருகப்பெருமானின் அறுபடை வீடுக
மதுரை: தங்களை இம்சித்த சூரபத்மனை முருகப்பெருமான் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தார். தேவசேனாதிபதியின் வெற்றியை கொண்டாடிய தேவர்கள் துயரம் நீங்கினர். வெற்றி வேல் வீர வேல் என்று முழக்கமிட்டனர். துன்பத்தில் இருந்து காத்த முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் நிகழ்ந்த முருகன் வள்ளி தெய்வானை திருமணக்கோலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
திருமணம் ஆகாதவர்கள், தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்கிறார்கள். மொத்தத்தில் தெய்வத் திருமணத்தை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் தகரும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சூரனை சம்ஹாரம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தெய்வானையுடன் சுப்ரமணியருக்கு திருமணம் நடைபெற்றது.
குரு பெயர்ச்சி 2019: குரு பலம் உங்க ராசிக்கு வந்திருச்சா? - எப்படி தெரிஞ்சுக்கலாம்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரோகரா என கோஷம் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, கடலில் புனித நீராடினர்.
மாப்பிள்ளை சாமிக்கு கல்யாணம்
ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்மன் தவசுக்குப் புறப்பட்டு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபம் சேர்ந்தார். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக வந்து திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.
கல்யாண விருந்து
தொடர்ந்து தெற்கு ரதவீதி - மேல ரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமியும் அம்மனும் திருக்கோயில் சேர்ந்தனர். நள்ளிரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கல்யாண விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதினர்.
16 வகை அபிஷேகம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவுநாள் நிகழ்ச்சியாக சண்முகர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ண மலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.
வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
ஐந்தாம் படை வீடான சுவாமிமலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில், சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முருகபெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த வெற்றிக்கு அடையாளமாக வள்ளி தெய்வனை திருக்கல்யாணம் நடைபெற்றது.
சினம் தணிந்த முருகன்
கோவை மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அன்னையிடம் வேல் வாங்கி எழுந்தருளிய முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார். இதை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி வாகை சூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முருகனின் கோபம் தணிக்கும் விதமாக 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தணிகை மலை முருகன்
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி விழாவில் சுமார் 5 டன் மலர்களால் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்ற முருகன் கோயில்களில் நடைபெற்றாலும், சூரனை வதம் செய்த முருகன் சினம் தணிந்து காட்சி தருவதால், திருத்தணியில் புஷ்பாஞ்சலி நடத்தப்படுவது சிறப்பு. பக்தர்கள் பல்வேறு வகையான பூக்கூடைகளை சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களை பக்தர்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.
தெய்வீக திருமணங்கள்
திருமணம் ஆகாதவர்கள், தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்கிறார்கள். மொத்தத்தில் தெய்வத் திருமணத்தை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் தகரும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோவில்களில் நடைபெற்ற தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.