கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் - குவியும் பக்தர்கள்
முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழிக்காமல், அவர்களை மன்னித்து தடுத்து தன்னுடனேயே ஆட்கொண்டதால் தான், அதனை சம்ஹாரம் என்று சொல்கிறோம். இதற்கு அர்த்தம் பகைவர்களையும் மன்னித்து அருள்பால
திருசெந்தூர்: கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நாளான சூர சம்ஹாரம் நாளை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களால் திருச்செந்தூரில் கோவில் வளாகமும் கடற்கரை பகுதியும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா என்று சொல்லும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள்
கந்த சஷ்டி கவசந்தனை...
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் சூரசம்ஹார திருவிழா இந்த ஆண்டு, நாளை திருச்சீரலைவாய் என்று சொல்லப்படும் திருச்செந்தூரில் நடைபெறவிருக்கிறது. இதற்காக பக்தர்கள் அனைவரும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை திதிக்கு மறுநாளான பிரதமை திதியில் தொடங்கி 6ஆம் நாளான சஷ்டி திதி வரையில் விரதம் இருந்து 6ஆம் நாளில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், தங்களின் விரதத்தை முடிப்பது என்பது ஐதீகம்.
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
கந்தனாகிய முருகப்பெருமான சஷ்டி திருநாளில் விரதமிருந்து வழிபடுவது தான் கந்த சஷ்டி விரதம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். கிராமத்து பழமொழியில் சொல்வதானால், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும், என்று. ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்னவென்றால், திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, முருகப்பெருமானை நினைத்து ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் ஆரம்பித்து ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிச்சயம்.
மனதை அடக்கும் கந்தன்
கந்த சஷ்டி விரதம் எல்லாம் சரி, ஆனால் கந்தன் என்றால் என்ன தெரியுமா. கந்து+அன்= கந்தன், அதாவது, கந்து என்றால் யானையை கட்டிப்போடும் தூண். விளக்கமாக சொல்வதென்றால், எதற்கும் அடங்காமல் நான் தான் பெரியவன் என்ற மமதையில் தரிகெட்டுத் திரியும் மனதை அடக்கி இறைவன் என்ற தூணோடு சேர்த்து கட்டுதல் என்பதாகும். இதன் காரணமாகவே முருகப் பெருமானுக்கு கந்தன் என்ற பெயர் வந்தது.
அழகன் முருகன்
அமாவாசைக்கு பின், வளரும் சந்திரன் பொதுவாகவே மந்தமாகவே இருக்கும். ஆனால், ஆறாம் நாளான சஷ்டி திதியில் மட்டும் அரை நிலவாகி வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கும். அது சரி முருகன் என்றைக்கும் அழியாத அழகன் என்பது தானே அர்த்தம். இதில் இன்னொரு அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. அரைநிலவு நாளில், நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்ப்பு விசையானது சரிவிகித அளவோடு இருக்கும். இதன் காரணமாக இயற்கையும் எந்தவித சீற்றமும் இல்லாமல், கடல் கொந்தளிப்பு இல்லாமல், ஏகாந்தமாக அமைதியாக காணப்படும்.
ஆட்கொண்ட இறைவன்
பொதுவாக தேவர்களுக்கும், முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கும் துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை, முழுமுதல் கடவுளான விநாயகர் முதல் சிவன், விஷ்ணு, பராசக்தி என அனைத்து தெய்வங்களும் வதம் செய்து அவர்களை அழிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழிக்காமல், அவர்களை மன்னித்து தடுத்து தன்னுடனேயே ஆட்கொண்டதால் தான், அதனை சம்ஹாரம் என்று சொல்கிறோம். இதற்கு அர்த்தம் பகைவர்களையும் மன்னித்து அருள்பாலிப்பதே ஆகும்.
அகந்தை அழித்த முருகன்
சம்+ஹாரம்=சம்ஹாரம். சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், வெற்றி, நன்மை என பல அர்த்தம் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இத்தனையையும் நமக்கு கொடுப்பது சம்ஹாரம் ஆகும். நம்மிடம் உள்ள தீய குணங்களையும், நான் என்ற அகந்தையையும் விட்டொழித்தால் தான் நமக்கு இத்தனை நன்மைகளும் கிடைக்கும்.
முருகன் அருள் கிடைக்கும்
ஆகவே, சஷ்டி திருநாளில் விரதம் இருந்து, சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று, நான் என்ற அகந்தையை விட்டொழித்து, அழகன் முருகப்பெருமானிடம் இருந்து, அழகு, அன்பு, பிறப்பு, சுத்தம், நன்மை, வெற்றி என்ற சகலத்தையும் வேண்டிப்பெறுவோம். அதுமட்டுமில்லாமல், சிவனின் அம்சமான ஆறு முகத்தையும், அதாவது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம். அதோமுகம் என ஆறு முகங்களையும் ஒரு சேர முருகப் பெருமான் வடிவில் வணங்கி அவன் அருள் பெறுவோம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.