கந்த சஷ்டி : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் - ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்
கந்த சஷ்டியை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகன் கோவில்களில் இன்றைய தினம் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் உலகமெங்கும் உள்ள முருகன் ஆலயங்களிலும் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூரில் ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெற்ற சூரசம்ஹாரம் இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்தவர்கள் வேல் வேல் வெற்றி வேல் என்று முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிக்கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது.
சஷ்டி விரதத்தின் மகிமை
கந்தனாகிய முருகப்பெருமான சஷ்டி திருநாளில் விரதமிருந்து வழிபடுவது தான் கந்த சஷ்டி விரதம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். கிராமத்து பழமொழியில் சொல்வதானால், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும், என்று. ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்னவென்றால், திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, முருகப்பெருமானை நினைத்து ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் ஆரம்பித்து ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிச்சயம்.
இரண்டாம் படை வீடு
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ஆம் திருநாளான இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரம் செய்ய கிரிவீதியில் எழுந்தருளினார்.
இன்று சூரசம்ஹாரம்
கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி ஆட்கொண்டார். அப்போது கூடியிருந்தவர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டனர்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
சூரசம்ஹாரம் முடிந்து நாளை இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்றும் நாளையும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம் தற்போது பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யுடியூப் இணையதளத்திலும், தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சூர சம்ஹாரம் கோலாகலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை தவிர கதித்தமலை, செஞ்சேரிமலை, சிவன்மலை, சென்னிமலை, திருப்போரூர் கந்தசாமி கோவில், கந்த கோட்டம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிங்கார வேலர் சந்நிதிகளில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முருகன் கோவில் நெல்லை
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில் முன்பகுதியில் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமிக்கு காட்சி கொடுத்தல் வைபவமும் கோவில் உள்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
நெல்லையப்பர் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று மாலையில் ஆறுமுகர் சன்னதி முன்பு நடைபெற்றது. இதேபோல் பாளையஞ்சாலைகுமாரசாமி கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணியர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.