திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழா - கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கந்தசஷ்டி திருவிழா இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 1ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ஆம் திருநாளான வருகிற 20ஆம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலையில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7ஆம் திருநாளான 21ஆம்தேதி சனிக்கிழமை இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7ஆம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
"அமித்ஷாஜி வருகிறார் என்றாலே இங்கு பயந்து கொள்கிறார்கள்".. ஒரே பேட்டியில் தெறிக்க விட்ட எல்.முருகன்
கந்த சஷ்டி திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் பகுதியில் இரவில் தங்குவார்கள். மேலும் இங்குள்ள விடுதிகளிலும் ஒரு வார காலத்துக்கு விடுதிகளை பதிவு செய்தும், மடங்களிலும் தங்குவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் மற்றும் கோவில் வளாக பகுதியில் தங்க அனுமதி இல்லை. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்லவும் யாருக்கும் அனுமதி இல்லை.
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவிகிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிகிதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்திடவோ அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் கோவில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் வீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.