கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: பழனி, பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் வீட்டிலேயே காப்பு கட்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம் என்று பழனி, பழமுதிர்சோலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பழனி: கந்த சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்யவும், சூரசம்ஹாரத்தை காணவும் அனுமதியில்லை என்று பழனி மலை கோவில் நிர்வாகிகளும், பழமுதிர்சோலை கோவில் நிர்வாகிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
கந்த சஷ்டி விரதம் முருகனுக்கு உகந்த விரதம். ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடுவார்கள். கந்த சஷ்டி நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும். நோய் நொடிகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கந்த சஷ்டி காலங்களில் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று தங்கி விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது முருகனின் மூன்றாம் படை வீடான பழனியிலும் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையிலும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்றும், வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருக்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். இந்த வருடம் வருகிற 15ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கண்டபிறகு திருக்கல்யாணத்துடன் விரதத்தை நிறைவுசெய்வார்கள்.
பழனியில் கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிரிவீதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கிரிவீதி செல்லும் அனைத்து வழிதடங்களும் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூரசம்ஹாரத்தின் போது கோவில் அலுவலர்கள், குருக்கள்கள் மற்றும் சீர்பாதம் தாங்கிகள் ஆகியோர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டாலும், திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒருசில கோவில்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திரம் தொடங்கி வைகாசி விசாகம், கிருத்திகை திருவிழாக்கள் முருகன் கோவில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இப்போது கந்த சஷ்டி விழாவும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை ஆன்லைனில் தரிசனம் செய்து பக்தர்கள் விரதம் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.