பங்குனி திருவிழா : கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 29ல் கொடியேற்றம் - ஏப் 5ல் அறுபத்துமூவர்
சென்னை மயிலாப்பூரில் பங்குனி மாத அறுபத்து மூவர் திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 5ஆம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு கபாலீஸ்வரர்
சென்னை: புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா வரும் மார்ச் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று தேரோட்டமும், தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவீதியுலா வைபவமும் நடைபெறும். பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவத்துடன் விழா இனிதே நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து விடையாற்றி பெருவிழா நடைபெறும்.
சென்னை மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கும், பிற பகுதிகளில் இருந்து சென்னையில் வேலை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு இடம் என்றால் அது மயிலாப்பூரும் அங்கு குடிகொண்டு அருள்பாலிக்கும் கபாலீஸ்வரரும் அன்னை கற்பகாம்பாளும் தான். சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் மிகப்பெரும் வி.ஐ.பிக்களுக்கும் அடிக்கடி வந்து தரிசனம் செய்யும் ஒரு புகழ்பெற்ற கோவிலாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல், இக்கோவிலிலும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டு தான் இருக்கும். குறிப்பாக மார்கழி மாதத்தில் நடைபெறும் மயிலாப்பூர் திருவிழாவும், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி திருவிழாவும் அதனோடு கூடிய அறுபத்து மூவர் திருவிழாவும். மயிலாப்பூர் திருவிழாவாவது மயிலையில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் திருவிழா. ஆனால் அறுபத்து மூவர் திருவிழாவை மட்டும் தான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகும்.
குறிப்பாக பங்குனி திருவிழாவின் உச்சமாக விளங்கும் அறுபத்து மூவர் திருவிழா அன்று சென்னை முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏழை எளியவர், பணக்காரர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல், அனைவரும் அன்ன தானம் முதற்கொண்டு தங்களால் முடிந்த அனைத்து உணவுவகைகளையும், நீராகாரங்களையும், இனிப்பு வகைகளையும் மக்கள் அள்ளிக்கொடுப்பார்கள். இதனால் சென்னையில் அன்றைய தினமே திருவிழா கோலத்தில் மிதக்கும். அன்றைய தினம் நான் பட்டினியாக இருந்தேன் என்று யாருமே சொல்ல முடியாத அளவுக்கு திணற திணற அன்னதானத்தை மக்கள் வழங்குவார்கள்.
இந்த ஆண்டு பங்குனி உற்சவம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கபாலீஸ்வரர் அன்னை கற்பகாம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பகல் மற்றும் இரவு வேளைகளில் நான்கு மாடவீதிகளிலும் திருவீதியுலா வந்து காத்திருக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அதோடு நாதஸ்வர நிகழ்ச்சிகளும் பக்தி சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தேர்த் திருவிழா வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் தொடங்குகிறது. பெரிய தேரில் கபாலீஸ்வரரும் அன்னை கற்பகாம்பாளும் எழுந்தருளுவர். காலை 7 மணியளவில் தேரோட்ட வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் புகழ்பெற்ற அறுபத்து மூவர் திருவீதியுலா வரும் வைபவம் தொடங்கும்.
முன்னதாக காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள அங்கப்பூம்பாவை உயிர்பெற்று எழும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலையில் அறுபத்து மூவர் திருவிழா தொடங்கும். இவ்விழாவில் முழுமுதற்கடவுளான விநாயகர் முன் செல்ல. அவரைத் தொடர்ந்து மன்னை கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வெள்ளித் தேரில் பவனி வர, தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேஸ்வரர் பவனி வர, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் நான்கு மாட வீதிகளிலும் வலம் வருகின்றனர்.
அவர்களுடன், திருவள்ளுவர், வாசுகி, அன்னை முண்டகக்கன்னி அம்மன், அன்னை அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பல்வேறு தெய்வங்களும் திருவீதியுலா வருகின்றனர். பின்னர், ஏப்ரல் 7ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவத்துடன் விழா இனிதே நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து விடையாற்றி பெருவிழா நடைபெறும்.